Monday, January 25, 2016

தினம் ஒரு பாசுரம் - 63

 தினம் ஒரு பாசுரம் - 63


முனிவன் மூர்த்தி மூவராகி* வேதம் விரித்துரைத்த புனிதன்*

பூவை வண்ணன் அண்ணல்* புண்ணியன் விண்ணவர்கோன்*


தனியன் சேயன் தானொருவனாகிலும்* தன்னடியார்க்கு இனியன் *


எந்தை எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே. 


திருமங்கை மன்னன் (பெரிய திருமொழி)

இப்பாசுரத்தில், திருமங்கை மன்னன், பக்திப் பேருவகையில், பெருமாளை எப்படி வியந்து போற்றிப் பாடியிருக்கிறார் என்று பாருங்கள் !!! இதற்குப் பொருளுரை என்று ஒன்றை எழுதுவது தேவையில்லை என்றாலும், பாசுரம் சொல்லும் சில சுவையான எண்ணங்களை/செய்திகளை கட்டாயம் பகிர வேண்டும்!

பொருளுரை:
முனிவன் - (எல்லா உலகங்களையும் படைத்துக் காக்கும்) இறைவனும்
மூர்த்தி மூவராகி - நான்முகனையும், சிவனையும் படைத்து மூவர் ஆனவனும்
வேதம் விரித்துரைத்த புனிதன்- நான்மறைகளை விளங்க உரைத்த தூயவனும்
பூவை வண்ணன் அண்ணல் - காயாம்பூ நிறம் கொண்ட, சர்வலோக ரட்சகனும்
புண்ணியன் விண்ணவர்கோன் - தர்மத்தின் நாயகனும், வானோர் தலைவனும்
தனியன் - ஆதி அந்தம் இல்லாதவனும், ஒப்பாரில் சுவாமியும்
சேயன் தானொருவனாகிலும்* - தான் ஒருவன் மட்டுமே மிகத் தொலைவில் இருப்பவனும் (ஆக இருந்தும்)
தன்னடியார்க்கு இனியன் * - தன் அடியவர்களுக்கு (தனது எளிமை குணத்தினால்) இனியவனும்
எந்தை எம்பெருமான்* - என் அப்பனும், என் பெருமானும் ஆன திருமால்
எவ்வுள் கிடந்தானே - திரு எவ்வுள்ளில் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் ஆட்சி புரிகிறான்!


 பாசுரக் குறிப்புகள்: 

”வேதம் விரித்துரைத்த புனிதன்” - திருமங்கை மன்னன் பிறிதொரு பாசுரத்தில், “அன்னமதாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே” என்று ஓர் அன்னப்பறவை வடிவமாய், நான்மறைகளை நாராயணன் அருளியதைப் போற்றியிருக்கிறார்.  அங்கு “உரைத்த” என்று பாடிய ஆழ்வார், இங்கு “விரித்து உரைத்த” எனும்போது, அந்த வேதத்தின் சாரத்தை  பகவத்கீதையாக அர்ஜுனனுக்கு உபதேசித்த கண்ணபிரானைப் பாடுகிறார் என்று கொள்வது பொருத்தமானதே.

நான்மறைகளின் சாரத்தை திருவாய்மொழி, திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி என நான்கு பிரபந்தங்களாக ஆதிகுருவான (மாறன்) நம்மாழ்வாரை அருளச் செய்த அப்பரந்தாமனைச் சொல்வதாகக் கொள்வதிலும் ஒரு நயம் இருக்கிறதல்லவா! ”மாறன் பணித்த தமிழ்மறைக்கு மங்கையர் கோன் ஆறு அங்கம் கூற அவதரித்த”வர் அல்லவா! அதனால் தான் திருக்குருகைப் பிரான் ஆகிய நம்மாழ்வாரை இவ்வாறு ”மறைமுகமாக”ப் போற்றுகிறார் போலும் :-)

"தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு
நால்வேதம் கண்டானே கண்ணபுரத்து உறை அம்மானே” 


இன்னொரு பாசுரத்தில் திருமங்கை மன்னன், “நால்வேதம் கண்டானே” என்று திருக்கண்ணபுரத்துப் பெருமாளைப் பாடியிருக்கிறார்.  செய்வினைச் சொற்றொடராகவேப் பார்த்தால், “நான்மறைகளை அருளிச் செய்தவனே” என்று நேர்ப்பொருள் கொள்ளலாம்.  ஆனால், குருபரம்பரை வழி வந்த ஞான ஆச்சார்யரான பராசர பட்டர், செயப்பாட்டு வினையாகக் கொண்டு சிறப்பான பொருள் ஏற்படும்படி அருளினார். 

அதாவது, “நால்வேதங்களால் காணப்பட்டவன்” என்று கொள்வதும் ஏற்றதே என்றார் பட்டர் பெருமான். ”உபாயமும் (வழியும்), உபேயமும் (இலக்கும்) தானேயாக, நான்கு வேதங்களாலும் அறுதியிடப் பட்டவன்” எனும்போது பொருட்சுவை கூடுகிறதல்லவா!

தனியன் - திருமாலுக்கு ஒப்பாக இன்னொருவர் அண்டத்தில் இல்லை என்று பொருள். அவன் ஒருவனே, உணர்வதற்கரிய பரம்பொருள்

சேயன் - ”எட்டா தூரத்தில் இருப்பவன்” என்பது நேரடிப் பொருளாக இருப்பினும், இப்பாசுரத்தில், ”எண்ணுதலுக்கு அரியவன், விளக்கத்திற்கு அப்பாற்பட்டவன்” என்று கொள்ளல் வேண்டும்

”திரு எவ்வுள்” என்பது மருவி ”திருவள்ளூர்” ஆகிவிட்டது :-) இந்த திவ்விய தேசப்பெருமாளின் திருநாமம் வீரராகவன். பிணி,வினை தீர்க்கும் இறைவன் என்பதால், வைத்திய வீரராகவன் என்றும் அழைப்பர். தாயாரின் திருநாமம் கனகவல்லி. சைவப்பெருந்தகையான இராமலிங்க அடிகளாரும் திரு எவ்வுள் பெருமாளைப் போற்றி திருப்பஞ்சகம் (5 பாடல்கள்) அருளியிருப்பது குறிப்பிடவேண்டியது.

பல்லவர்கள் கட்டிய பழமையான திருக்கோயில் இது. மூலவர் சயன திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். சென்னைக்கு அருகே உள்ள திருமழிசையில் அவதரித்த திருமழிசைப்பிரான் என்ற ஆழ்வாரின் (இத்தலப்பெருமாள் பற்றிய) பாசுரமும் பிரசித்தமானது.

“நாகத்தணை குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத்தணை அரங்கம் பேரன்பில்
நாகத்தணை பாற்கடல் கிடக்கும் ஆதிநெடுமால்
அணைப்பர் கருத்தன் ஆவான்”



ஆழ்வார், பெருமாள் யோக நித்திரையில் துயிலும் திருத்தலங்களை பட்டியலிடுகிறார். திருக்குடந்தை, திருவெஃகா, திருவள்ளூர், திருவரங்கம், திருப்பேர் நகர், திருப்பாற்கடல் மற்றும் திருவன்பில் ஆகிய ஏழு வைணவ திருப்பதிகள் இதில் சுட்டப்பட்டுள்ளன. இந்த ஏழில், ஆழ்வார் அவதரித்த திருமழிசைக்கு அருகே உள்ள, அவர் அடிக்கடி தரிசித்த எவ்வுளுக்கு மட்டுமே “திரு” “வெவ்வுள்” என்ற மரியாதைக்குரிய விளித்தலை கவனிக்கவும் :-)

அன்புடன்
பாலா

Friday, January 22, 2016

தினம் ஒரு பாசுரம் - 62

தினம் ஒரு பாசுரம் - 62

உலவு திரையும் குலவரையும்* ஊழி முதலா எண் திக்கும்*

நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான்* வென்றி விறல் ஆழி வலவன்*

வானோர் தம் பெருமான்* மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன்*

சலம் சூழ்ந்து அழகாய* சாளக்கிராமம் அடை நெஞ்சே

---திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி)

இப்பாசுரத்தில், நேபாளத்தில், இமயமலை அடிவாரத்தில் இருக்கும் சாளக்கிராமம் திவ்விய தேசத்தை ஆழ்வார் பக்திப் பரவசமாக மங்களாசாசனம் செய்கிறார். இங்கு கோயில் என்று தனியாக எதுவும் தனியாக இல்லை. முக்திநாத் என்ற திருத்தலமே கோயில் தான். கண்டகி நதிக்கரையில் (தாமோதர குண்டம் என்ற இடத்தில்) ஏராளமாகக் காணப்படும் சாளக்கிராம கற்கள் அனைத்திலும் திருமால் அந்தர்யாமியாக உறைந்திருப்பதாக வைணவ மரபு சொல்கிறது.

நாராயணனை சாளக்கிராமத் திருமேனியன் என்று அழைப்பது உண்டு. பெரியாழ்வாரும் தனது திருமொழிப்பாசுரத்தில் “சாளக்கிராமமுடைய நம்பி” என்று கண்ணனைப் போற்றுகிறார்.  முக்திநாத் 51 சக்தி பீடங்களில் ஒன்று என்பது குறிப்பிடவேண்டியது. வைணவர்கள் சாளக்கிராமத்தை வீட்டில் வைத்து பூஜை (இதற்கு திருவாராதனை என்று பெயர்) செய்யும் வழக்கமுண்டு. பல விஷ்ணு ஆலயங்களில் மூலவர் வெள்ளி அல்லது  தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராமமாலை அணிந்தே காட்சியளிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். படத்தில் சிவப்பாகக் குறித்திருக்கிறேன்.
பல ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது  தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராமமாலைகளும் அணிவிக்கப்படுவதுண்டு. - See more at: http://m.dinakaran.com/adetail.asp?Nid=2646#sthash.A3f55lUe.dpuf
பல ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது  தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராமமாலைகளும் அணிவிக்கப்படுவதுண்டு. - See more at: http://m.dinakaran.com/adetail.asp?Nid=2646#sthash.A3f55lUe.dpuf
பல ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது  தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராமமாலைகளும் அணிவிக்கப்படுவதுண்டு. - See more at: http://m.dinakaran.com/adetail.asp?Nid=2646#sthash.A3f55lUe.dpuf
பல ஆலயங்களில் மூலவருக்கு வெள்ளி அல்லது  தங்கப் பூண்களுடன் கூடிய சாளக்கிராமமாலைகளும் அணிவிக்கப்படுவதுண்டு. - See more at: http://m.dinakaran.com/adetail.asp?Nid=2646#sthash.A3f55lUe.dpuf









திருமங்கையாழ்வார் 'சகலமும் பரந்தாமனே' என்கிறார் இப்பாசுரத்தில் !

உலவு திரையும் குலவரையும்* - உலாவுகின்ற கடல் அலைகளிலும், பெருமலைகளிலும்
ஊழி முதலா எண் திக்கும்* - காலம் மற்றும் எட்டு திசைகளிலும்

நிலவும் சுடரும்  - நிலவிலும், கதிரவனிலும்

இருளுமாய் நின்றான்* - இருளிலும் (இவ்வாறாக அனைத்திலும் அந்தர்யாமியாக உறைந்து) நிற்பவனும்,

வென்றி விறல் - வெற்றியும், பெருமையும் மிக்க

ஆழி வலவன்* - திருச்சக்கரத்தை தன் வலக்கையில் ஏந்தியவனும்

வானோர் தம் பெருமான்* - இமையவர்க்குத் தலைவனும்

மருவா அரக்கர்க்கு - பகைமை (பாராட்டும்) அரக்கர்க்கு

எஞ்ஞான்றும் சலவன்* - எல்லாக்காலங்களிலும் தீமைகள் செய்பவனும்

சலம் சூழ்ந்து அழகாய* - நீர் சூழ்ந்து எழில் நிறைந்த

சாளக்கிராமம் அடை நெஞ்சே - சாளக்கிராமம் அடைந்து (அப்பெருமானைப்) பற்றி வணங்கு என் நெஞ்சமே!

ஆழ்வார், பரமனே சகலமும் என்பதை இருவிதமாக, எளிமையாக விளக்குகிறார். முதலில் அவன் அந்தர்யாமியாக அனைத்திலும் உறைந்திருப்பதை, அதாவது திருமாலின் அண்டம் வியாபித்த (ALL PERVADING) தன்மையைப் பாடுகிறார். இரண்டாவதாக, அவன் உருவ,வடிவ குணநலன்கள் (கல்யாண குணங்கள்) சிலவற்றைப் போற்றுகிறார். அருவ, உருவ என்று திருமாலின் இருவகைத் தன்மைகளையும் சொல்கிறார்.

”அப்படிப்பட்டவன் சாளக்கிராமத்தில் எழுந்தருளியுள்ளான், உடனே சென்று அவன் திருவடியைப் பற்றித் தொழுதேத்துக” என்று அடியவரான நமக்கு வழி காட்டுகிறார். மிக எளிமையான, அந்தர்யாமித்துவத்தை பறைசாற்றும் அற்புதமானதொரு பாசுரம்! ஆழ்வார் மறவர் குலத்தில் அவதரித்த மாவீரர்  என்பதாலோ என்னவோ, சங்கை விட திருச்சக்கரத்தை அதிகம் பாடியிருக்கிறார் :-)

அன்புடன்
பாலா
 

Wednesday, March 25, 2015

உலகக்கோப்பை கிரிக்கெட் - தென்னாபிரிக்காவின் துரதிட்டம்

இது வரை நடந்த உலகக்கோப்பை-2015 ஆட்டங்கள் அனைத்தையும் மிஞ்சும் வகையில், நேற்று நடந்த தென்னாபிரிக்கா-நியூஜிலாந்து அரை இறுதி ஆட்டம் அமைந்தது. இரு அணிகளும் அபாரமாக ஆடின. தெ.ஆ அணிக்கு அழுத்தமான சூழல்களில் சொதப்புபவர்கள் (Chokers) என்ற பட்டம் பல காலமாக இருந்து வருவது தெரிந்தது தான். ஆனால், அவர்கள் முதலில் பேட் செய்தபோது மன உறுதியுடன் நம்பிக்கையாக விளையாடினர் என்று கூறுவேன். 10 ஓவர்களுக்குள் 2 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், டுபிளஸ்ஸியும், ரசௌவும் நிதானமாகவே ஆடினர். 100 ஓட்டங்களை எட்ட 24.1 ஓவர்கள் ஆயின. ஆதாம் மில்னேக்கு ஏற்பட்ட காயத்தால் அவருக்கு பதிலாக பந்து வீசிய இளைஞர் மாட் ஹென்றி அற்புதமாக பந்து வீசி தனது முதல் 5 ஓவர்களில் 9 ரன்களே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

டிவிலியர்ஸ் களமிறங்கிய பின் தெ.ஆ அவசர/அதிரடி கதிக்கு மாறியது. வில்லியம்சன் 23வது ஓவரில் ஒரு ரன் அவுட்டையும், அடுத்த ஓவரில் ஒரு காட்ச்சையும் சொதப்பியதில், டிவிலியர்ஸ் 2 முறை தப்பிப் பிழைத்தார். தெ,ஆ 38 ஓவர்களில் 216/3 (டிவிலியர்ஸ் 60, டுபிளஸ்ஸி 82) என்ற மிக வலுவான நிலையில் இருந்தபோது, 1992-லும், 2003-லும் சதி செய்த மழை மீண்டும் தன் வேலையைக் காட்டியதில், ஆட்டம், 43 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. இருந்தும் மிச்சமிருந்த அந்த 5 ஓவர்களில், மில்லரின் மகா அதிரடியில் (49 ரன்கள், 18 பந்துகளில்) தெ.ஆ 65 ஓட்டங்கள் எடுத்தது. டக்வொர்த்-லூயி கணக்குப்படி, நியூஜியின் இலக்கு 43 ஓவர்களில் 298 (பிரதி ஓவருக்கு கிட்டத்தட்ட 7 ரன்கள்) என்று நிர்ணயிக்கப்பட்டு, ஒரு அருமையான “துரத்தலுக்கு” அடித்தளம் அமைக்கப்பட்டது.

நியூஜி பேட்டிங்: மெக்கல்லம் ஆட்டம் இலக்கு பொறுத்து அமையும் ஒன்றல்ல. இலக்கு 100,200.300 என்று எதுவாக இருந்தாலும், ஐபில் டி20 என்றாலும் உலகக்கோப்பை ஒரு நாள் ஆட்டம் என்றாலும், அதிரடி தான் அவர் பாணி. ரஜினி ஸ்டைலில் சொல்வதானால், மெக்கல்லம் வழி தனிவழி :-) 5 ஓவர்களில் நியூஜி 71 ஓட்டங்களை குவித்தது. அதில் மெக்கல்லம் எடுத்தது 59 (26 பந்துகள்). உலகத்தின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினை ஒரு கிளப் பந்து வீச்சாளர் போல மெக்கல்லம் குரூரமாக எதிர்கொண்டதில் , 5வது ஓவரில் மட்டும் 25 ஓட்டங்கள்!


என் டிவிட்டு ஒன்று:

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  9h 9 hours ago

Thats what you call stand and deliver. .... Brendon's sixer against the 1 and only Steyn #NZvsSA

அந்நாள் முக்குச்சிக்காரனும், இந்நாள் தாக்கடி மட்டையாளுமான மெக்கல்லம் வெறி கொண்ட வேங்கையாக இருந்த காலையில் (சரி மாலையில்), வெளிவிலகுச்சுழல் வீசும் தென்னாப்பிரிக்கா பந்தாள் இம்ரான் தஹீர் 6வது வீச்சலகை ஒரு வெற்றலகாக  வீசியது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும் (இந்த வரி மட்டும் கவிஞர் மகுடேஸ்வரன் எழுதிய https://www.facebook.com/photo.php?fbid=863785130326644&set=a.278177815554048.60630.100000854949412&type=1 கட்டுரை தந்த உத்வேகத்தில் எழுதப்பட்டது)

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  9h 9 hours ago

Now SA can make a match of this contest as Mccullum has departed. Styne should be 1 relieved man #NZvsSA #worldcupcricket

மெக்கல்லம் 6வது ஓவரில் ஆட்டமிழந்தவுடன் தான், ஆட்டம் ஒரு சமநிலைக்கு வந்தது என்று கூறலாம். அவர் இன்னும் ஒரு 10 ஓவர்கள் களத்தில் இருந்திருந்தால், இந்த ஆட்டத்தை ”நகம் கடிக்க” வைத்த ஒன்றாக நாம் எல்லாம் சோசியல் மீடியாவில் சிலாகித்திருக்க மாட்டோம் என்று உறுதியாக கூறுவேன்.  வில்லியம்ஸும், குப்தில்லும், சோபிக்கவில்லை. டெய்லரும், எலியட்டும் கவனமாக, சற்று நிதானமாக ஆடினாலும், முதல் 5-ஓவர் மெக்கல்ல அதிரடியால், 22 ஓவர்கள் வரை (டெய்லர் விக்கெட்டிழப்பு) தேவையான ரன்ரேட் 7-ஐத் தாண்டவில்லை. நியூஜி 151/4.  முக்கியமான தருணங்களில் தாக்குதலில் இறங்காமல், மெத்தனமாக, ஒரு சுகம் தரும் வட்டத்தில் (comfort zone) தென்னாபிரிக்கா இயங்குவது கூட அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் எனலாம். One must attack when the opponent seems to be a bit down.

நீயூஜி பாதிக்கிணறு தாண்டிய நிலையில் ஆண்டர்சன் களமிறங்கினார். இந்த இடத்தில், ஆண்டர்சனையும், எலியட்டையும் பாராட்ட வேண்டும், அழுத்தம் எதுவும் காட்டாமல், அமைதியாக ஓட்டங்களை எடுத்தனர். 32வது ஓவரில், தெ,ஆ-வின் தலைசிறந்த ஃபீல்டர் டிவிலியர்ஸ் ஒரு எளிமையான ரன் அவுட் வாய்ப்பை நழுவ விட்டார். நம்பவே முடியாத தருணம் அது. அது அழுத்ததினால் நிகழ்ந்ததாகத் தான் அப்போது தோன்றியது.

என் டிவிட்டுகள்:

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU 

The very Devil took over DeVilliers in that moment of choking madness. He had time to pull a stump out after the crucial miss #NZvSA

anbudan BALA|எஅ.பாலா retweeted
prempanicker @prempanicker  

The batsman wasn’t in the frame, AB!! You could have gathered, bounced the ball a couple of times and still had time!!


anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU 

.@ksnagarajan Choking just seen in brilliant DeVilliers missing the simplest of runouts #NZvSA #worldcupcricket

32வது ஓவர் முடிவில் ரன்ரேட் 8-ஐத் தாண்டினாலும், 6 விக்கெட்டுகள் கையிருப்பில் (11 ஓவர்களில் 90 ரன்கள் தேவை), நியூஜி கை சற்றே ஓங்கி இருந்ததாகத் தான் தோன்றியது. நடுவில் டிவிலியர்ஸ் ஒரு 8 ரன் ஓவர் வீசினார். மார்க்கல் வீசிய 38வது ஓவர் ஒரு மிக அற்புதமான ஓவர். ஒரு ரன் தான் கொடுத்தார். ஆண்டர்சன் விக்கெட்டை வீழ்த்தினார். மிக அதிக உயரம் சென்ற பந்து விழும் இடத்தை அருமையாக மதிப்பிட்டு காட்ச் பிடித்த டிபிளஸ்ஸியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஓவர் முடிவில், ரன்ரேட் முதல் முறையாக 9-ஐத் தாண்டியது.

என் டிவீட்டுகள்:

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

60:40 in SA favour now #NZvSA

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

29 from 18. When most #ipl teams can win from here, why cant the Black Caps :-) #NZvSA

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

I am not supporting anyone here. Destiny will take its course in thrillers. Ony upto a point effort works. #NZvSA #worldcupcricket

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

This is LIVE WIRE #NZvSA

41வது ஓவரில், ரோன்ச்சி அவுட். தனது 5 உலகக்கோப்பையில் பங்கு கொள்ளும் 36-வயது டேனியல் வெட்டோரி களமிறங்கினார்.  மீண்டும் ஒரு ரன் அவுட் சொதப்பல், எலியட்டுக்கு ”உயிர்” கிடைத்தது. ஓவர் முடிவில், தேவையான ரன்ரேட் 11.50.  42வது மார்க்கல் ஓவரில், பெஹர்தீனும், டூமினியும் மோதிக்கொண்டதில் காட்ச் வாய்ப்பு பறிபோய் எலியட்டுக்கு மீண்டும் ஒரு “உயிர்” கிடைத்தது!  இவற்றை வைத்து, தென்னாபிரிக்க அணியை Chokers என்றழைப்பது சற்றே அதீதம் என்பேன். துரதிட்டமிக்க ஒரு அணியாகத் தான் தென்னாபிரிக்காவை நான் பார்க்கிறேன். இறுதி ஸ்டெயின் (43வது) ஓவரில் 12 ரன்கள் தேவையான சூழலில், 5வது பந்தில் எலியட் ஒரு பிரம்மாண்ட சிக்ஸர் அடித்து, மீதம் வரலாறு ஆனது. 2015 உலகக்கோப்பை போட்டியின் சிறந்த அணியாக பலரும் கருதும் நியூஜிலாந்து முதன்முறையாக உலகக்கோப்பை ஒரு நாள் போட்டி இறுதிச்சுற்றில் நுழைந்தது.


நியூஜியின் மகத்தான வெற்றிக்குப் பின் நான் இட்ட சில டிவீட்டுகள்:


anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

One feels so sorry for SA. Such a talented bunch of cricketers, tend to falter near the last mile #NZvSA

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

NZ NZ NZ NZ NZ NZ NZ NZ NZ NZ NZ NZ #NZvSA

 anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

.@priyakathiravan Steyn for all his proven skills & greatness delivered much less in crunch situations. He doesn't inspire confidence #facts

 anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  6h 6 hours ago

Though I acted neutral today, I was secretly wishing for a famous SA win as in some ways SA cricket reflects my life #NZvSA #worldcupcricket

anbudan BALA|எஅ.பாலா @AmmU_MaanU  ·  5h 5 hours ago

When Morne was shedding tears, I really felt depressed. #NZvSA That lanky kid bowled his heart out today and that was not enough


முகத்தில் வலியைத் தேக்கிய டிவிலியர்ஸின் இப்புகைப்படம், தென்னாபிரிக்காவினரின் சோகத்தின் வெளிப்பாடாகவும்,

ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் இந்த டிவிட்டர் குறிப்பு, நியூஜிலாந்து நாட்டினரின் பெருமகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் காண முடிகிறது. 

Stephen Fleming, the Back Caps' former captain, was ecstatic.

“What an unbelievable game. So proud of the Back Caps and what they have achieved. Also feel the raw pain of South Africa on an amazing day,” read his post on the social networking site.

இறுதியாக ஒரு விஷயம்: நாளை நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அரைஇறுதியில் இந்தியா டாஸில் வென்றால், சிட்னி ஆடுகளத்தை நோக்குகையில்,  ஃபீல்டிங் செய்வது உத்தமம் என்று படுகிறது. ஏனெனில், முதலில் ஆடி, 300+ ரன்கள் அடித்தால் கூட அது போதுமா என்று தெரியவில்லை.

---எ.அ.பாலா

Friday, November 28, 2014

Phillip Hughes - அசாதாரணத் திறமை -- அஞ்சலி


Phillip Hughes - அசாதாரணத் திறமை -- அஞ்சலி

ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் பலப்பல ஆண்டுகள் தொடக்க ஆட்டக்காரராக பரிமளித்திருக்க வேண்டிய பிலிப் அகாலமாக, ஒரு அசாதாரணமான நிகழ்வில் மரணம் அடைந்தது மிகவும் வருந்தத்தக்கது. ஒரு விவசாயின் மகனாகப் பிறந்து, தனது குடும்பத்தின் வாழைத்தோட்டத்தில் கிரிக்கெட் ஆடத் தொடங்கி, தனது அசாத்தியத் திறமையினால், 20 வயதிலேயே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கியவர், ஸ்டெயின், மார்க்கல், சோத்சோபே, நிதினி ஆகியோர் அடங்கிய தென்னாப்பிரிக்காவின் சூப்பர் வேகப் பந்துவீச்சை திறம்பட ஆடி, தனது முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 75 ஓட்டங்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவின் மகத்தான வெற்றிக்கு வழி வகுத்தவர்.

2வது டெஸ்ட்டில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான டர்பன் ஆடுகளத்தில், 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்து, உலக சாதனை நிகழ்த்தியவர். இதன் மூலம் ஜார்ஜ் ஹெட்லியின் 79 ஆண்டு சாதனை வீழ்ந்தது. சற்று நிதானமாக ஆடுபவர் என்ற முத்திரையை உடைத்து, வெலிங்டன் டெஸ்ட் ஒன்றில், 75 பந்துகளில் 86 ரன்களை விளாசி, ஒரு முக்கியமான வெற்றிக்கு காரணமானவர். அதற்கு நேர் மாறாக, 2011 கொழும்பில், இலங்கைக்கு எதிராக மட்டை போட்டு, சதமடித்து, டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வெல்ல வித்திட்டவர். ஒரு நாள் போட்டிகளிலும் 2 சதங்கள் அடித்துள்ளார். கிராமப்புறத்துக்கு உரித்தான தன்னடக்கமும், அமைதியும், தன்னம்பிக்கையும் மிக்க இளைஞரும் கூட.

இன்னும் எவ்வளவோ சாதித்திருக்க வேண்டிய, "Never say die" என்ற ஆஸ்திரேலிய சித்தாந்தத்திற்கு எடுத்துக்காட்டாக கிரிக்கெட் ஆடிய, ஒரு இளைஞர் 26 வயது நிரம்புவதற்குள் மரித்து விட்டார். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.

-- எ.அ.பாலா

Saturday, November 22, 2014

ரோஹித் சர்மா 264 - அசாதாரணத் திறமை

 30 நவம்பர் 2014 கல்கி வார இதழில் வெளிவந்த எனது கட்டுரை:

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் சர்மா எடுத்துள்ள 264 ரன்கள் அபார சாதனை.  ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தபோதிலும், இலங்கை அணியின் பந்து வீச்சும், தடுப்பும் மோசமாக இருந்தும், 173 பந்துகளில் அவர் எடுத்த 264 ஒரு ஸ்பெஷல் இன்னிங்க்ஸ்.

 விரல் எலும்பு முறிவு காரணமாக முதல் 3 போட்டிகளில் ஆடாமல், 4வது போட்டியில் களமிறங்கியபோது, ரோஹித் தொடக்கத்தில் நிதானமாகவே ஆடினார், அதாவது முதல் சதமெடுக்க 100 பந்துகள் ஆனது. அதன் பின் தான் பிரம்மாண்ட விளாசல்!

ரோஹித் எதிர்கொண்ட அடுத்த 73 பந்துகளில் அவர் 164 ரன்கள் குவித்தார்! ஸ்டிரைக் ரேட் 225%. அந்த 164 ரன்களில் 21 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் (132 ரன்கள்) அடங்கும். அதோடு, அதிரடி ஆட்டத்தில் திறமை மிக்க விராத் கோலியுடனான 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில், ரோஹித் எடுத்தது 132 ரன்கள், கோலி எடுத்தது அதில் சரிபாதி 66 தான். இதிலிருந்தே அது ஓர் அசாதாரணமான, அபாரமான, அரிதான ஒரு நாள் இன்னிங்க்ஸ் என்பது விளங்கும்.

பிப் 2006-ல், தனது 19வது வயதில், ரோஹித் தனது சீனியர் கிரிக்கெட் பயணத்தை, மேற்கு மண்டல அணியின் சார்பில் தியோதர் போட்டி ஆட்டமொன்றில், தொடங்கியபோதே, அபரிமிதமான திறமை கொண்டவராக பலராலும் சிலாகிக்கப்பட்டவர். அதே ஆட்டம் தான் செத்தேஷ்வர் புஜாராவுக்கும் ரவிந்திர ஜடேஜாவுக்கும் கூட முதல் ஆட்டம் என்பது கூடுதல் தகவல். ரோஹித்தும் ஜடேஜாவும் மேற்கு மண்டல வெற்றிக்கு வழிவகுத்தனர்.

அடுத்த ஆண்டிலேயே, இந்திய ஒரு நாள் போட்டிக்கான கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்து விட்டாலும், அத்தனை திறமை இருந்தும், சர்வதேச அளவில் ரோஹித் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள 6 ஆண்டுகள் ஆனது. இடையே, T-20 உலகக்கோப்பையை (2007) இந்தியா வெல்ல, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக ஆடினார். 2011-ல் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரோஹித் இடம் பெறவில்லை.

அசாத்திய திறமைக்குத் தக்கவாறு பரிமளிக்க இயலாத, சற்றே அயற்சியான, அந்த காலகட்டத்தில், ஐபிஎல் T-20 மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் குறிப்பிடத்தக்க சிலபல இன்னிங்ஸ்களை ரோஹித் ஆடியிருக்கிறார்.  அவரது தலைமையில் 2013-ல் மும்பை அணி ஐபிஎல் T-20 கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

அவரது ஆதிரடி ஆட்டம் கூட, பேட்டிங் இலக்கணத்திலிருந்து அதிகம் விலகாமல், விவிஎஸ்.லஷ்மண் ஆட்டத்திற்கு இணையான, கண்ணுக்கு விருந்தாக அமையும் தன்மை கொண்டதாகவே தொடர்ந்தது. அசுர பலத்தை விடவும், கிரிக்கெட் ஆட்டத்திற்கு மிக முக்கியமான டைமிங் என்ற சங்கதியும், மைதானத்தில் இடைவெளிகளில் பந்தைச் செலுத்தும் லாவகமும், பந்தை எதிர்கொள்ள அவருக்குக் கிட்டும் ஒரு அரை வினாடி அதிக நேரமும் ரோஹித்துக்கு இயற்கையாகவே வாய்க்கப் பெற்றவை. ஆடுகளத்தைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் நேர்த்தியாக ஷாட்கள் ஆடக்கூடிய திறனும் ரோஹித்துக்கு பெரிய பலம். அதோடு, ரெய்னா, ஜடேஜாவுக்கு இணையான சிறந்த பந்து தடுப்பாளரும் கூட.

டெஸ்ட் போட்டியில் அசாருதீனுக்கு மாற்றாக விவிஎஸ்.லஷ்மண் பரிமளித்தது போல, விவிஎஸ்ஸின் இடத்திற்கு மாற்றுத் தேர்வாகவே ரோஹித் கருதப்பட்டார். ஆனால், அவருக்கு முன்னமே, ரெய்னா, புஜாரா, விராத் ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் நுழைந்து விட்டனர். ஒரு வழியாக, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான நவம்பர் 2013 டெஸ்ட் தொடரில் களமிறங்கி, தனது முதல் மற்றும் அடுத்த ஆட்டங்களில் தொடர் சதங்கள் அடித்தும், பின் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டங்களில் ரோஹித் சறுக்கலைச் சந்தித்தார்.

ஜனவரி 2013-ல், ஒரு நாள் போட்டிகளில், துவக்க ஆட்டக்காரராக ரோஹித் ஆட ஆரம்பித்த பின் தான் அவரது  திறமையின் முழு வீச்சைக் காணும் வாய்ப்பு நமக்கு ஏற்பட்டது.

2013 ஜனவரியிலிருந்து, சமீபத்தில் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் குவித்து ஓர் உலக சாதனையை நிகழ்த்திய போட்டி வரை, ரோஹித் ஆடிய 38 போட்டிகளில், 3 சதங்கள், 11 அரைச்சதங்கள் என்று ரன்களை (சராசரி 53) குவித்ததைப் பார்க்கையில் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில், இந்தியா கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே தோன்றுகிறது!

மேலே குறிப்பிட்ட ரோஹித்தின் 3 சதங்களில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பங்களூரில் அடித்த மற்றொரு இரட்டைச்சதமும் (209) உண்டு. ஆக, ஒரு நாள் (50 ஓவர்) சர்வதேசப் போட்டிகளில், 2 இரட்டைச்சதங்கள் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் ரோஹித்துக்குச் சேர்கிறது.  இருப்பினும் இன்றைய T-20 உலகத்தில் இச்சாதனையை மிஞ்சுவது கடினம் என்று கூற இயலவில்லை! ஒரு நாள் போட்டியில் ஒருவர் 300 ரன்கள் எடுக்கும் வாய்ப்பு இருப்பதாகவேத் தோன்றுகிறது.  அதுவரை ரோஹித் தான் சூப்பர் ஹீரோ.

”அன்புடன்”
பாலா

நன்றி: கல்கி

Saturday, November 08, 2014

விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் செஸ் உலகநாயகன் ஆவாரா?

விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் செஸ் உலகநாயகன் ஆவாரா? -எ.அ.பாலா



செஸ் ஆனந்த் குறித்து நான் முன்னர் எழுதிய இடுகைகள்:

http://idlyvadai.blogspot.in/2012/06/blog-post.html
http://idlyvadai.blogspot.in/2013/11/blog-post_17.html
http://balaji_ammu.blogspot.in/2013/11/deccan-chronicle.html

2007லிருந்து தொடர்ச்சியாக 6 ஆண்டுகள், (5 முறை) உலக செஸ் சேம்பியனாக வலம் வந்த ஆனந்த், சென்ற வருடம் சென்னையில் நடந்த உலக சேம்பியன்ஷிப் ஆட்டத்தில் இளம் செஸ் ஜாம்பவான் கார்ல்சனிடம் தோல்வியடைந்தபோது, பலரும் அவரது செஸ் வாழ்க்கைக்கு இறப்பறிக்கை எழுதி விட்டனர். அதற்குக் காரணம், 43 வயது ஆனந்தின் மனத்தளர்ச்சியும், முடிவாட்ட திறமைக்குறைவும் கார்ல்சனுக்கு எதிரான சில ஆட்டங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆனந்த் ரிடையர்மெண்ட்டை அறிவித்து விடுவார் என்று தான் நானும் நினைத்தேன்.

ஆனால், உண்மையான சேம்பியன்கள் தடாலடியாக முடிவெடுப்பதில்லை! சில மாதங்கள் ஓய்வுக்குப் பின், மார்ச் 2014ல் ரஷ்யாவில் நடைபெற்ற (கார்ல்சனுக்கு போட்டியாளரை தேர்ந்தெடுக்கும்) Candidates போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தார். உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர்கள் (கிராம்னிக், டோபலோவ், ஆரோனியன், ஆண்ட்ரிகின், மமெதயரோவ், கர்ஜாகின், பீட்டர் ஸ்விட்லர்) பங்கு கொண்ட அந்த மிகக்கடினமான 14 சுற்றுகள் கொண்ட போட்டியில், மிகத் திறமையாக, புது உத்வேகத்துடன் விளையாடி, இறுதிச்சுற்றுக்கு முன்பாகவே, டோர்னமண்ட்டை வென்று, மீளொரு முறை 2014 உலக செஸ் சேம்பின்ஷிப் போட்டியில் கார்ல்சனை எதிர்கொள்ள தகுதி பெற்றார். நிச்சயமாக யாருமே எதிர்பார்க்காத விஷயமிது! ஆனந்தின் செஸ் மீதான காதல் அத்தகையது.

Candidates tournament பற்றி வாசிக்க:
http://www.thechessdrum.net/blog/2014/03/31/world-candidates-2014-14-anand-wins-naysayers-silenced/

உலக செஸ் சேம்பின்ஷிப் போட்டி இன்று (8 நவம்பர் 2014, மாலை 5.30) தொடங்குகிறது. எப்போதும் போல 12 கிளாசிக்கல் செஸ் ஆட்டங்கள் வாயிலாக, சேம்பியன் நிர்ணயிக்கப்படுவார். அதாவது, யார் முதலில் 6.5 புள்ளிகளைத் தொடுகிறாரோ அவரே சேம்பியன். 6-6 என்று நிலையில், 4 துரிதவகை செஸ் ஆட்டங்கள் நடைபெறும். இப்போட்டியிலும், ஆனந்த் under dog-ஆகத் தான் கருதப்படுகிறார் என்றாலும், அது அவருக்கு நல்லதே. சென்ற முறை அவர் சேம்பியனாக இருந்ததும், போட்டி சென்னையில் நடைபெற்றதும், அவருக்கு சற்று மன அழுத்தத்தை ஏற்படுத்தி பாதகமாகவே அமைந்தன. இம்முறை ஆனந்த் தனது இயற்கையான, சற்றே அதிரடியான ஆட்டத்தை (2013 உலக செஸ் சேம்பின்ஷிப் போட்டியின் 9வது ஆட்டம் போல) கைக்கொள்ளலாம்! அது பலன் தரும் என்பது என் எண்ணம். தற்காப்பு வகை ஆட்டம், ஒரு கால்பந்து ஆட்டக்காரருக்கு நிகரான கார்ல்சனிடம் பலனளிக்காது!

விஷி ஆனந்த் இன்று எழுதியிருப்பதை வாசிக்க: It is time to get into match mode!
http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=It-is-time-to-get-into-match-mode-08112014017005

மேலும், கார்ல்சன் இவ்வருடம் நடைபெற்ற சில போட்டிகளில் சோபிக்கவில்லை. அதனால், முதல் 6 ஆட்டங்களில் சமநிலை இருப்பின், அவருக்கும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. செஸ் ஆட்டக்காரர்கள் பலர், ஆனந்த் இம்முறை நல்ல மனநிலையிலும், முன்னேற்பாடுடனும் இருக்கிறார் என்று கருதினாலும், தனது 44 வயதில், கார்ல்சனை வென்று ஆனந்த் மீண்டும் உலக சேம்பியன் ஆவது எளிதன்று. முக்கியமாக, முடிவாட்ட நிலை (End Game position) என்பது எளிமைப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாமல் இருக்குமாறும், நீண்ட ஆட்டங்கள் தரும் சோர்வினால் ஆட்டத்தில் தவறுகள் (Blunders) ஏற்படாமலும் ஆனந்த் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது.

---எ,அ,பாலா

Saturday, October 25, 2014

ஒளிப்பதிவாளர் அசோக் குமார் - அஞ்சலி

அசோக் குமார் அஞ்சலி - எ.அ.பாலா
பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமார் உடல் நலக்குறைவால் கடந்த 6 மாதங்களாக மருத்துவமனையும், வீடுமாக இருந்ததை செய்திகளில் வாசித்திருப்பீர்கள். மே மாதம் சாவின் விளிம்பு வரை சென்றவர் அதிலிருந்து மீண்டு தீபாவளி தினமன்று (அக் 22, 2014) தனது 70-வது வயதில் காலமானார்.

அறுபதுகளில் தொடங்கி ஒரு 30 ஆண்டுகள் இந்தியாவின் தலைசிறந்த 5 ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருந்தார் என்று தாராளமாகக் கூற முடியும். அவரது கேமரா வழிப் பார்வை அத்தகையது. அவரது மேஜிக் லென்ஸ் வழியாக பார்த்து பார்த்து நமக்கு பல அரிய பொக்கிஷங்களை வழங்கியிருக்கிறார் அசோக் குமார் அகர்வால்! அவரது ஸ்பெஷாலிட்டி, சினிமாவுக்காக அவர் ஒளிப்பதிவு செய்த காட்சிகள் ஒரு போதும் உறுத்தவே உறுத்தாது.

ஜானி, உதிரிப்பூக்கள் படங்களுக்கு ராஜாவின் இசை எந்த அளவுக்கு பலம் சேர்த்ததோ, அதற்கு குறைவில்லாமல் பலம் சேர்த்தது அசோக்கின் கேமரா என்பதை பலரும் ஏற்றுக் கொள்வர். கதை, திரைக்கதை, நடிப்பு ஆகியவற்றில் மிகச் சிறந்த படங்கள் கூட காலத்தால் அழியாமல் மனதில் நிற்க இசையும், ஒளிப்பதிவும் மிக முக்கியமானவை. ஜானி, உதிரிபூக்கள், மஞ்சில் விரிஞ்ச பூக்கள் (மோகன்லாலின் முதல் படம்), மெட்டி போன்றவை அந்த வகையைச் சார்ந்தவை. அசோக் வெற்றி விழா, நடிகன், சூரியன், மன்னன், ஜீன்ஸ் என்ற மசாலா படங்களுக்கும் அழகாக ஒளிப்பதிவு செய்திருப்பார். அவரது Back Light -ல் படம் பிடிக்கும்  திறமை அசாதாரணமானது!

அசோக் குமார் 1980-ல் ”நெஞ்சத்தைக் கிள்ளாதே” திரைப்படத்திற்கு தேசிய விருது வாங்கியவர். எவ்வளவோ தமிழ் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்..... இந்தியாவின் முதல் 3-டி படமான மை டியர் குட்டிச்சாத்தானின் ஒளிப்பதிவாளரும் கூட. பல மலையாளப்படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். தமிழ்நாடு, கேரள மாநில அளவில் விருதுகளும், நந்தி விருதும் வாங்கியிருக்கிறார். Back Waters என்ற ஆங்கிலப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அசோக் பாலு மகேந்திராவுக்கு பிடித்த ஒளிப்பதிவாளர் என்பதே மிகப்பெரிய விருது தான்.

எவ்வளவோ மனதைத் தொட்ட காட்சிகள் உண்டு. சட்டென்று தோன்றிய சில:

உல்லாசப்பறவைகள் (ஜெர்மனியின் செந்தேன் மலரே... கண்ணில் நிற்கிறது)
ஜானி (இசையும் ஒளிப்பதிவும் இப்படத்திற்கு 2 தூண்கள்)
நெஞ்சத்தைக் கிள்ளாதே (லேசான பனி விழும் காலையை, “பருவமே புதிய பாடல் பாடு” பாடலில் அவர் அற்புதமாக படம் பிடித்திருப்பார்.. எப்போது அந்தப் பாடலைக் கேட்டாலும் நாஸ்டால்ஜியா தான்)
மெட்டி (சந்தக்கவிகள் பாடும் மனதில் இன்பக்கனவுகளே!)

நிற்க.... அவர் மறைவு குறித்து அசோக் குமாரின் மகன் ஆகாஷ் பேசியதை வாசித்ததில் மனது கனமாகி விட்டது!

ஒரு வாரம் முன்பு அசோக் குமார் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்ததும், கடந்த வாரம் அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆகாஷ் தமிழ்த்திரையுலக சங்கங்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என்று பலருக்கும் தனது தந்தையின் நிலைமை குறித்து செய்தி அனுப்பியும், அவரது இறுதிக் காலத்தில், கடினமானதொரு சூழலில் ஆதரவு அளிக்குமாறு வேண்டியும், குறிப்பிடும்படியாக ஒருவரும் அசோக்கை சென்று பார்க்கவுமில்லை, அவர் இறுதிச்சடங்குக்கும் எடிட்டர் லெனின், இன்னும் சிலர் தவிர்த்து யாரும் செல்லவும் இல்லை என்பது வருத்தமான விஷயம்.

ஆகாஷ் “என் அப்பா புகழின் உச்சியின் இருக்கையில், எத்தனையோ டைரக்டர்கள், நடிகர்கள், அவரிடம் விவாதிக்கவும், அவருடன் பணியாற்றும் வாய்ப்புக்காகவும், வீட்டுக்கு வந்த வண்ணம் இருந்தது என் அம்மாவுக்கு ஞாபகமிருக்கிறது! இன்று அவருக்கு அஞ்சலி செலுத்த யாரும் வராததைப் பார்க்கையில், எப்படிப்பட்ட உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை! என் தந்தையின் ஆசிர்வாதத்தைப் பெற வராதவர்களுக்கு கொடுப்பினை இல்லை என்பதாக எடுத்துக் கொள்கிறேன்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். எடிட்டர் லெனினும் அசோக் குமாரின் இறுதிச்சடங்குக்கு யாரும் வராதது குறித்து வருந்தியதாகத் தெரிகிறது.

இத்தனை சோகத்திலும், ஆகாஷை தேற்றும் விதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இறப்புச் சான்றிதழுக்காக, தமிழில் மனு எழுத வேண்டியிருந்தது. அந்த அலுவலகத்திற்கு பக்கத்தில் இருந்த ஒரு சிறுகடையின் உரிமையாளரை ஆகாஷ் உதவிக்கு அணுகியபோது, பெயரைக் கேட்ட மாத்திரத்தில், மாலை நாளிதழ் ஒன்றை எடுத்துக் காட்டி, அதில் வந்திருந்த மரணச்செய்தியில் இருந்த அசோக் குமார் தான் ஆகாஷின் தந்தையா என்று அவர் வினவியிருக்கிறார். ஆகாஷ் ஆமோதித்தவுடன், அந்த சிறுகடை உரிமையாளர் மிகவும் மகிழ்ந்து, உதிரிப்பூக்கள் படத்தில், அசோக் குமார் பூக்களை பலவிதமாக, அழகாக படம் பிடித்ததை நினைவு கூர்ந்தாராம்! “This is my Dad's Legacy" Akash related.

ஏதோ ஒரு விதத்தில், கேமரா வழிக் காட்சிகள் வாயிலாக என்னை/நம்மை மகிழ்வித்த அசோக் குமார் என்ற ஜீனியஸின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

--எ.அ.பாலா

Thursday, August 28, 2014

நீயா நானா? - மருத்துவர் மேல் பாய்ச்சல்


நீயா நானா? - மருத்துவர் மேல் பாய்ச்சல்

தொழிலில் உள்ள எல்லா பொறியாளர்களுமே நல்ல பொறியாளர்களா எல்லாருமே நல்ல ஆசிரியர்களா? அது போலத் தான் மருத்துவத்துறையும் அங்குமிங்கும் குற்றம் குறை இருக்கத் தான் செய்கிறது. எனக்குத் தெரிந்து, ஒரு ஐடி கம்பெனியில் பணிக்குச் சேர்ந்த ஒன்றிரண்டு வருடத்தில், ஒரு பையனோ பெண்ணோ ஆன்சைட் வாய்ப்பு கிடைக்குமா என்று தான் பார்க்கிறார்கள். அது அமெரிக்காவுக்கு சேவை செய்ய எல்லாம் இல்லை, பணம் ஈட்டத் தான். மனித உபாதைகளையும் நோய்களையும் குணப்படுத்துவதால் அல்லது உயிரைக் காப்பாற்றுவதால் மருத்துவத்துறைக்கு சமூகத்தில் உயரிய இடமளிக்க வேண்டும் என்ற விவாதத்துக்குள் செல்வதில் எந்தப் பயனுமில்லை.

Medicine is also a profession like others.  மேலும் வணிக நோக்கு (அல்லது பொருள் சார்பு -materialism) மிகுந்திருக்கும் காலச்சூழலில், மருத்துவத்துறையிலும் அதன் தாக்கம் இருப்பது இயல்பானதே.  பொதுவாக ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்ற இரு தரப்பினரையும் சற்று உயர்வான இடத்தில் நம் சமூகம் பல காலமாக வைத்து வந்துள்ளது. அவர்களின் குறைபாடுகள் சற்று தீவிரமாக பார்க்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கியக்காரணம். ஒரு 30-35 ஆண்டுகளுக்கு முன் அவை இரண்டும் மேன்மை (Nobility என்ற பொருளில்) மிக்க தொழில்களாக, சேவையாக கருதப்பட்டன. இப்போது அது சீரியஸாக கேள்விக்குள்ளாகி வருகிறது, வருத்தமான விஷயம் தான். நிற்க.

மருத்துவத்துறை சார் பிரச்சினைகளை/குறைபாடுகளை ஆராய்ந்து களையவேண்டிய கடமை மருத்துவர்களுக்கும், அரசுக்கும், சமூகத்திற்கும் என்று எல்லாருக்கும் உள்ளது என்பதை உணர்தல் அவசியம்.  விஜய்டிவியில் சமீபத்தில் ஒளி”பரபரப்பான” ”நீயா நானா” நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்ட விதமும், அதில் நடந்தேறிய Gimmicks-ம் டி.ஆர்.பி எகிறுவதற்கு பயனளித்திருக்குமே அன்றி, அதில் சமூக நோக்கு உள்ளது என்று ஒப்புக் கொள்வது கடினம். மருத்துவத்தொழில் மீது வைக்கப்படும் முக்கியப் புகாரான அலட்சியப்போக்கை (Negligence) கண்டறிய/எதிர்கொள்ள சுமுகமாக முறையில் வழிவகை காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, வேறு விஷயம்.

ஒரு கேள்வி கேட்டு விட்டு எதிர்தரப்பு பதிலை முடிக்கும் முன்னே குறுக்கீடு என்பது, அப்பட்டமான சார்பு தெறிக்கும், அர்னாப் ஸ்டைல் விவாதமேடை, அதனால் துளியும் பயன் இல்லை. மாஸ்டர் ஹெல்த் செக்  (MHC) என்பதை விளக்கக் கூட விடாமல், ”மாஸ்டர்” என்ற சொல் இருப்பதால், அது அனைத்து வகையான பரிசோதனைகளையும் உள்ளடக்கிய ஒன்று போலத் தோற்றமளிப்பதாகக் கூறுவது, உளறுதல் அல்லாமல் வேறென்ன?  நல்லவேளை, ”மாஸ்டர்” ஹெல்த் செக் என்பதை சரக்கு மாஸ்டர் அல்லது ஹெட்மாஸ்டருக்கு மட்டுமே செய்யவேண்டும் என்று மருத்துவர் மேல் பாய்ந்த சிலபல கனவான்களில் யாரும் சொல்லவில்லை ;-)

மருத்துவர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுவதின் வாயிலாக யதார்த்தத்தில் பிரச்சினைகளை முறையாக அலச முடியுமா, தீர்வை அணுகத்தான் முடியுமா ? தொடர்பில்லாமல் அவரவர் ஏதேதோ பேசுவதை விடுத்து, மருத்துவத்துறை சார்ந்த 3-4 முக்கியப்பிரச்சினைகளை கையில் எடுத்து, இரு தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்து, ஆரோக்கியமான முறையில் அவற்றின் தாக்கங்களையும், தீர்வுகளையும் முன் வைப்பதே, சமூகப்பிரச்சினைகளை  அலசி ஆராய்வதாகக் “காட்டி”க்கொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு அழகு! இதையெல்லாம் மருத்துவத்துறையை விட பல மடங்கு வணிக நோக்கமும், அப்பட்ட சார்பு நிலை பற்றி துளியும் கவலையில்லாத டிவி மீடியாவில் எதிர்பார்க்கலாமா என்று யாராவது கேள்வி கேட்டால் நான் அம்பேல்!

மேற்கூறிய நிகழ்ச்சியில் மருத்துவரை மட்டம் தட்டவேண்டும் என்ற சார்பு நிலையுடன், அதிபுத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு ஆவேசப்படுவதும், ஒரு isolated incident-ஆல் (இன்னும் சிலவும் இருக்கலாம் தான்) பாதிக்கப்பட்டவரை முன்னிறுத்தி ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பையும் காழ்ப்பையும் உண்டாக்கி குளிர்காய்வதும், ’நீயாநானா’ இன்னும் பிரபலம் அடைவதற்கும், கோபிநாத்தின்  “சமூகக்காவலர்” இமேஜை செம்மைப்படுத்தவும் நிச்சயம் உதவலாம்! ஏதோ ஒரு கோவை(?) மருத்துவமனையின் அலட்சியப்போக்கால் பாதிக்கப்பட்ட அப்பெற்றோருக்கு ”உரிய நீதி” கிடைக்க, கடைசி வரை விஜய்டிவியும், ”நீயாநானா” குழுவினரும் துணை நிற்கப் போகிறார்களா என்று யாராவது கேட்டுச் சொல்லவும்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாலும், சிலபல “நீயா நானா” நிகழ்ச்சிகளில் “அனைத்தும் யாம் அறிவோம்” என்ற தொனியை காண முடிந்தது.  மருத்துவருக்கு எதிரான நிகழ்ச்சியில் அத்தொனியும், blatant-ஆன சார்பும் சற்று தாங்கமுடியாமல் இருந்ததால், சுட்டிக்காட்டவேண்டும் என்று தோன்றியது! Master Health Check தேவையற்றது என்று குரல் கொடுத்தது போல, சினிமா தியேட்டர்களில் MRP-க்கு 5-6 மடங்கு விலையில் தின்பண்டங்கள் விற்கப்படும் அநியாயத்திற்கு எதிராகவும் “நீயா நானா” குரல் கொடுத்தால், பொதுமக்களுக்குப் புண்ணியமாப் போகும்.  மல்டிபிளக்ஸ்களில் சினிமா டிக்கெட்டுக்கும், அங்கு விற்கப்படும் ஜங்க் ஃபுட்ஸ், குளிர்பானங்களுக்கும் சாமானிய மக்கள் அடிக்கடி கொட்டிக் கொடுக்கும் பணத்திற்கு, அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை அடிப்படை உடல்நலப் பரிசோதனை செய்து கொள்வது ஒன்றும் அத்தனை மோசமான விஷயமாகத் தோன்றவில்லை.

(அந்த நிகழ்ச்சியில்) எவ்வளவு அராஜகம் பண்ணியிருந்தால், ஒரு டாக்டர் இப்படி (கீழுள்ள லிங்க்கில் சுட்டப்பட்டிருக்கும் ஆடியோ!) பொங்கியிருப்பார் என்று யோசியுங்கள்! One needs to understand that Response will always be proportionate to one's behavior in a TV Show!

Tuesday, August 12, 2014

நம்பெருமாளுடன் ஒரு நாள்

இட்லிவடை வலைத்தளத்திலும் பதிப்பிக்கப்பட்டது

 
ஸ்ரீரங்கம் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதை யோசித்து.... ஒரு நாள் பயணமாக ஸ்ரீரங்கம் செல்லலாம் என்று எடுத்த திடீர் முடிவின் காரணமாக, குடும்ப சகிதம் வெள்ளி (8.8.2014) அன்று காலையில், எப்போதும் போல லேட்டாகச் செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் ஸ்ரீரங்கம் போய்ச் சேர்ந்தேன். ஹோட்டல் அறையின் பால்கனியிலிருந்து ரம்யமான ராஜ கோபுர தரிசனமும், முரளி காபிக்கடையின் ஃபில்டர் காபியும் புத்துணர்ச்சி அளிப்பதாய் இருந்தன.





வைணவ பாரம்பரித்தில், கோயில் என்று பொதுவாகக் கூறினால், அது ஸ்ரீரங்கத்தையே குறிப்பிடுவதாகும். அழகிய மணவாளன், அரங்கன் என்றழைக்கப்படும் அரங்கமாநகருளானுக்கு “நம்பெருமாள்” என்ற பெயர் வந்ததற்கு ஒரு சுவையான காரணக்கதையை Jsri யின் வலைத்தளத்தில் (http://mykitchenpitch.wordpress.com) கண்டேன். அதன் சுருக்கம்:

ஸ்ரீரங்கத்தில் அயலாரின் படையெடுப்புக்கு (அப்போது தில்லி சுல்தான்) பயந்து,  திருமலைக்கு
ஒளித்து எடுத்துப்போன அரங்கன் விக்ரகத்தை 60 வருடங்கள் கழித்தே மீட்டு எடுத்து வந்தார்கள். அதுவரை வேறு ஒரு உத்சவமூர்த்தியை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடந்துவந்தன. காணமல் போன அரங்கன் சிலை பற்றி அறிந்தவர்கள் யாருமே உயிருடன் அப்போது இல்லாமல் போனதால், திரும்பி வந்த விக்ரகஹத்தை அசல் என்று பலரும் ஏற்க மறுத்தனர். ஆனால், எப்போதோ காணாமல் போன ரங்கநாயகித் தாயாரின் விக்ரஹம், 60 வருடங்கள் கழித்து திருமலையிலிருந்து அரங்கன் விக்ரகம் திரும்பி வந்த அதே சமயத்தில், கிடைத்து விட, ஸ்ரீரங்கம் திரும்பிய உத்சவர் தான் அசல் அரங்கனோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டு விடுகிறது!

அரங்கன் விக்ரஹம் திருமலை செல்வதற்கு முன், அரங்கனின் ஆடைகளை சலவை செய்து வந்த, பின்னர் கண்பார்வை இழந்த 93 வயது வண்ணான் ஒருவர் இன்னும் உயிருடன் இருப்பது தெரியவருகிறது. அவரை அழைத்து விசாரித்ததில், அவர் கூறிய விக்ரஹ அடையாளங்கள் ஒத்துப் போனது. மேலும் அவர் தன்னால் அபிஷேக (திருமஞ்சன) தீர்த்தத்தை ருசித்து இனம் காணமுடியும் என்று சொல்ல, பழைய/புதிய உத்சவமூர்த்திகளின் அபிஷேக தீர்த்தமும் (ஈரவாடை என்று கூறுவர்) அவருக்கு அளிக்கப்படுகிறது. திருமலையிலிருந்து மீண்டு வந்த அரங்கனின் தீர்த்தத்தை அருந்திய அச்சலவைத்தொழிலாளி, ‘ இவரே நம் பெருமாள், இவரே நம் பெருமாள்! ’ என மகிழ்ச்சியில் கூவ, ‘நம்பெருமாள்’ என்ற பெயர் அரங்கனுக்கு நிலைத்தது. ஈரத்தமிழில் திருவாய்மொழி அருளிய காரிமாறப்பிரானை வாஞ்சையோடு “நம் ஆழ்வார்” என்று நாம் அழைப்பதில்லையா!

ஸ்ரீரங்கம் கோயில் 7 பிரகாரங்கள் கொண்ட பிரம்மாண்டமான கோயில். 108 வைணவ திருப்பதிகளில் முதன்மையானது. 10 ஆழ்வார்களால் (except மதுரகவி & தொண்டரடிப்பொடியாழ்வார்) பாடல் பெற்றது திருவேங்கடம் எனப்படும் திருமலையும், திருப்பாற்கடலும். ஆனால், 11 ஆழ்வார்களால் (except மதுரகவியாழ்வார் – இவர் தன் ஆச்சார்யன் நம்மாழ்வார் பற்றி மட்டுமே பாடியுள்ளார் -கண்ணிநுண் சிறுத்தாம்பு) பாடல் பெற்ற ஒரே திவ்யதேசம் திருவரங்கம் மட்டுமே! 247 பிரபந்தப் பாசுரங்களில் ஸ்ரீரங்கம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங் கோயில்
சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் தீர்க்கும்கோயில்
திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே!

என்று தன்னுடைய அதிகார ஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி (பாகவத சிம்மம் என்று போற்றப்பட்ட) சுவாமி வேதாந்த தேசிகன் குறிப்பிடுகிறார்.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் அருளிய ”கங்குலும் பகலும் கண் துயிலறியாள்” பதிகமும், திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிப்பிரான் (10) பாசுரங்களும், தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலைப்பாசுரங்களும் எனக்குப் பிடித்தவை. தொண்டரடிப்பொடியின் இப்பாசுரம் கல்லையும் கரைக்க வல்லது!

ஊரிலே காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே (என்) கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா, அரங்கமாநகருளானே!

பெரியாழ்வாரின் பாசுர முத்து ஒன்று:

கன்னி நன் மாமதிள் சூழ்தரு* பூம்பொழில் காவிரித் தென்னரங்கம்*
மன்னியசீர் மதுசூதனா! கேசவா!* பாவியேன்வாழ்வுகந்து*
உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலேயூட்டி ஒருப்படுத்தேன்*
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என் குட்டனே முத்தம் தா.

நாச்சியார் திருமொழியிலிருந்து:: 


தாம் உகக்கும் தம் கையிற் சங்கமே போலாவோ
யாம் உகக்கும் எம் கையில் சங்கமும்? ஏந்திழையீர்
தீ முகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே 



அரங்கன் தன் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல் சேஷசயனத்தில் இருப்பதைக் கண்டு நாச்சியார் ’புலம்புவதாக’ கீழுள்ள ஆண்டாள் பாசுரம் அமைந்துள்ளது :-) இங்கு சங்கம் என்பதற்கு அரங்கனின் கைச்சங்கு என்றும், கைவளையல் என்றும் இரு பொருள்கள் உண்டு. “அம்மனே” வுக்கு ”அந்தோ” என்று பொருள் கொள்ளவேண்டும்

அடுத்து சேரமன்னனாக விளங்கிய குலசேகர ஆழ்வாரின், பேரன்பும், பெரும்பக்தியும் இப்பாசுரங்களில் எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது, பாருங்கள்:

ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மாமலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திடத்
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப்பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே

கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்
கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்
கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப
சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த
திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி
வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே

கோயில் உள்/வெளிப் பிரகாரங்களில் பல சன்னதிகள் உள்ளன. செங்கமலவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமன், நுணுக்கமாக செதுக்கப்பட்ட. பிரம்மாண்டமான கருடாழ்வார், வாசுதேவன், மீசை வைத்த பார்த்தசாரதி, சுவாமி தேசிகர், தன்வந்திரி, ரங்கநாயகித் தாயாருக்குத் தனியாக என்று இப்படிப் பல. கோயில் விமானத்தில் மிக அழகான பரவாசுதேவர் கோலத்தை படத்தில் காணலாம்.



இங்குள்ள ராமானுஜரின் தனிச்சன்னதியில் அவரது “தான் ஆன” திருமேனியை தரிசிக்கலாம். அமர்ந்த நிலையில் உள்ள ராமானுஜரின் சிலைக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) கிடையாது. ஆண்டுக்கு 2 தடவை (ஐப்பசி,சித்திரை), பச்சைக்கற்பூரமும், குங்குமப்பூவும் கலந்து திருமேனியில் சாற்றுவது வழக்கம். அவரது ”தமர் உகந்த” திருமேனியை மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்திலும் ”தானுகந்த” திருமேனியை ஸ்ரீபெரும்புதூரிலும் தரிசிக்கலாம். பெருமாளின் துயிலணையாக விளங்கும் ஆதிசேஷனின் அவதாரங்களாக லட்சுமணன், பலராமன், ராமானுஜர் ஆகியோரைக் குறிப்பிடுவர்.



மேலும் தகவல்களுக்கு:

எந்தை இராமானுச முனியை (எம்பெருமானார், யதிராசர், பாஷ்யகாரர், உடையவர், இளையாழ்வார் என்ற பிற திருநாமங்களும் இவர்க்கு உண்டு) வைணவம் தழைக்க வந்த ஒரு புரட்சித்துறவி என்று தாராளமாக அழைக்கலாம். 1000 ஆண்டுகளுக்கு முன்னமே, சாதி பேதம் பாராமல், வைணவக் கொள்கைகளை கைக்கொண்ட அனைவரும், திராவிட வேதம் எனும் பிரபந்தப் பாசுரங்களை ஓதவும், வைணவ மதச்சின்னங்களை அணியவும், சமாஸ்ரயணம் என்ற சடங்கு வாயிலாக சங்கு சக்கர முத்திரைகளை பதிந்து வைணவத்தைப் பற்றவும், இராமானுசர் வழி ஏற்படுத்தினார். பெருமாள் (திருமால்) மேல் அன்பும், பற்றும், பக்தியும் கொண்டு, அவன் தாள் பற்றி பூரண சரணாகதி மேற்கொள்ளும் அடியவர் அனைவரும் வைணவரே என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவர் அண்ணல் இராமானுசர்.


”ரங்கா ரங்கா” கோபுரத்தின் இடது புறம் ஒரு 300 மீ தொலைவில், தெற்கு உத்தரவீதியில் மளவாள மாமுனிகளுக்கு தனிச்சன்னதி ஒன்று அமைந்துள்ளது. திருவாய்மொழிப்பிள்ளையின் சீடரான இவ்வைணவ ஆச்சார்யரன் உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம் ஆகிய கிரந்தங்களை அருளியதுடன் ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.

கூட்டம் குறைவாக இருப்பின், திருவரங்கம் கோயிலை முழுமையாக சுற்றிப்பார்க்க, தரிசிக்க குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஆகும். நான் சொன்னதற்கு மேல், திருவரங்கம் குறித்த செய்திகள் ஏராளமாக இணையத்தில் கிடைக்கின்றன. ஸ்ரீரங்கத்திற்கு அருகில் இருக்கும் இன்னும் சில கோவில்களுக்கு (கோயிலடி, திருஅன்பில், உத்தமர் கோயில், திருவெள்ளறை, குணசீலம்) சென்று வந்தது பற்றி பிறிதொரு சமயம் எழுதுகிறேன்.

Thursday, July 24, 2014

லார்ட்ஸ் டெஸ்ட் -இங்கிலாந்தின் சொ.செ.சூ இந்தியாவின் ஏற்றம்

இக்கட்டுரை இட்லிவடையிலும் பதிப்பிக்கப்பட்டது
28 நீண்ட வருடங்களுக்குப் பின், தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் இவ்வெற்றி, மிகவும் பாராட்டுக்குரியது என்பது அனைவரும் சொல்லும் ஒன்று தான். மிக முக்கியமாக, ஒரு இளம் இந்திய அணியின் முயற்சியால் கிடைத்த வெற்றி என்பதை நினைவு கொள்ள வேண்டும். டிராவிட், சச்சின், லஷ்மண், கங்குலி, சகீர் கான் என்ற ஜாம்பவான்கள் யாரும் இன்றி பெற்ற மகத்தான வெற்றி. 2011-ல் (இந்தியா மோசமாக தோற்ற) லார்ட்ஸ் போட்டியில் பங்கு பெற்ற அணியிலிருந்து தோனி, இஷாந்த் மட்டுமே இப்போது அணியில் உள்ளனர்.

ஏன் சொ.செ.சூ என்றால், இந்த 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து தனக்குச் சாதகமான “பச்சை”க்களத்தை தயார் செய்தது, ஆண்டர்சனும், ப்ராடும் (Broad சற்று Fraud-ம் தான்), இந்தியாவை ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்ற நம்பிக்கையில்! டாஸிலும் வென்று, இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. எதிர்பார்த்தபடி இந்தியாவும் 145-7 என்ற நிலையில் தடுமாறிக்கொண்டிருந்தபோது, ரஹானே (103), புவனேஷ்வர், ஷாமி, இஷாந்த் துணை கொண்டு, வழி நடத்தி, இந்திய ஸ்கோரை இரண்டு மடங்கு ஆக்கியதில், இந்தியா எடுத்த மொத்தம் 295. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் சொற்ப ரன்கள் அதிகம் எடுத்தும், இந்தியா 2-வது இன்னிங்ஸில் எடுத்த 342 ரன்களும், இஷாந்த்தின் அபார பந்து வீச்சும், இங்கிலாந்தின் எதிர்ப்பை முறியடித்தன.

களமும், ஸ்விங்கும் இருந்த விதத்தை வைத்துப் பார்க்கையில் இங்கிலாந்து முதலில் பேட் செய்திருந்தால், 150-ஐ தாண்டியிருக்காது என்று கூறுவேன். ரஹானேயின் முதல் இன்னிங்ஸ் சதம் அத்தகைய சிறப்பு வாய்ந்தது. இங்கிலாந்துக்கு தோதான ஒரு ஆடுகளத்தில், இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர், ஷாமி, இஷாந்த் இங்கிலாந்தின் 20 விக்கெட்டுகளில் 15-ஐ கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதுவும் 2வது இன்னிங்க்ஸில் வெள்ளைக்காரர்கள் நமக்கெதிராக பொதுவாக பயன்படுத்தும் பவுன்சர் ஆயுதத்தை (தோனியின் பலத்த அறிவுரையின் பேரில்) இஷாந்த் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது அசாதாரணம் என்பதோடு, மனவியல் ரீதியான ஒரு வெற்றியும் கூட!

இந்த லார்ட்ஸ் வெற்றிக்கு (தலைவர் தோனி தவிர்த்து) முக்கியக் காரணமாக குறிப்பிடவேண்டியவர்களாக, ரஹானே, முரளிவிஜய் (வித்தியாசமாக, இவர் பொறுமையின் உச்சமாக காட்சியளித்தது மன நிறைவைத் தந்தது), 2-வது இன்னிங்ஸில் 235/7 என்ற நிலையிலிருந்து இந்தியா 342 அடைய காரணமாக இருந்த ஜடேஜா மற்றும் வெறிபிடித்த வேங்கையாய் இங்கிலாந்தை வேட்டையாடிய இஷாந்த் ஆகியோர் இருந்தாலும், தனது ஆட்டத்தில் பரிமளித்தது மட்டுமன்றி (முதல் இன்னிங்ஸ் 6 விக்கெட்டுகள், 36 முக்கிய ரன்கள், 2-வது இன்னிங்க்ஸ் 52 மிக மிக முக்கிய ரன்கள்) “நம்மால் முடியும் அண்ணா” என்று சக வீரர்களுக்கு ஊக்கமும் அளித்த புவனேஷ்வர் குமார் தான் லார்ட்ஸின் கதாநாயகன் என்பது என் கருத்து.

1986-ஆம் ஆண்டு லார்ட்ஸ் வெற்றிக்கும் இந்த வெற்றிக்கும் சில சுவாரசியமான ஒற்றுமைகள் உள்ளன!

1. அப்போதும், இப்போதும் இந்தியாவின் கேப்டன்கள் உலகக்கோப்பையை ஏற்கனவே வென்றவர்கள் - கபில்தேவ், தோனி
2. அப்போதும், இப்போதும் தனது கடைசி இந்தியத்தொடரை வென்ற, ஓர் இடதுகை ஆட்டக்காரர் இங்கிலாந்தின் கேப்டன் - டேவிட் காவர், அலிஸ்டர் குக்
3. அப்போது ரோஜர் பின்னி, இந்த அணியில் அவர் மகன் ஸ்டூவர்ட் பின்னி
4. அப்போதும், இப்போதும் ஒரு துவக்க ஆட்டக்காரர், சென்னை மண்ணின் மைந்தன் - ஸ்ரீகாந்த், முரளிவிஜய்
5. அப்போதும், இப்போதும் ஒரு மும்பை வீரர் சதமடித்தார்! - வெங்க்சார்க்கர், ரஹானே
6. அப்போதும் ஷர்மா, இப்போதும் ஒரு ஷர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர் - சேத்தன் ஷர்மா, இஷாந்த் ஷர்மா :-)
7. அப்போது ரவி சாஸ்திரியும், இப்போது ஜடேஜாவும் அணியில் ஆல்ரவுண்டராக
8. இறுதியாக, 1986 மற்றும் 2014 இந்த இரண்டு ஆண்டுகளும் repeating வகை, அதாவது, இவ்விரு ஆண்டுகளின் கேலண்டர்களில் எந்த வித்தியாசமும் இருக்காது.

தலைமைச்சுமையால், மிகச்சிறந்த ஆட்டக்காரரான குக் சொதப்புவது பார்க்க பரிதாபமாக உள்ளது. அவர் கேப்டனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஒரு ஆட்டக்காரராக அவரை இழப்பது இங்கிலாந்துக்கு பேரிழப்பாகவே அமையும். இந்தியாவைப் பொருத்தவரை, இன்னும் 3 டெஸ்ட் ஆட்டங்கள் இருப்பதால், தோனி அணியில் ஒரு complacency வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்த டெஸ்ட் போட்டிகளுக்கும் இங்கிலாந்து க்ரீன் டாப் களங்களையே தேர்வு செய்யும், அவர்களுக்கு வேறு வழி கிடையாது. அதனால், இந்த 2 டெஸ்ட்களில் அத்தனை சிறப்பாக ஆடாத ஷிகர் தவானும், விராத் கோலியும் பொறுமையாக ஆடி ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்ப்பது மிக அவசியம். அனைவரும் டெஸ்ட் தொடரை இந்தியா இன்னும் வென்றுவிடவில்லை என்பதை தெளிவாக நினைவில் இருத்துதல் அவசியமாகிறது.

---எ.அ.பாலா

Sunday, May 11, 2014

அம்முவின் தந்தையாக

இந்த எனது வலைத்தளத்தின் வாயிலாக, தமிழ் கூறும் வலையுலகு நண்பர்களின் தொடந்து கொண்டேயிருக்கும் சிறப்பான ஆதரவோடு. சிலபல மாணவர்களின் கல்விக்கு உதவ முடிந்தது.

உதவி கேட்டு அவர்கள் வந்தபோது, அந்த ஏழை மாணவர்கள் 12-ஆம் பொதுத்தேர்வில்  (எ.கா: கௌசல்யா, மொஹம்மட் ஆசிக்....) எடுத்த மதிப்பெண்களை பார்த்து, மகிழ்ச்சியோடு, மிக்க பிரமிப்பும் அடைந்திருக்கிறேன்.

அதே பிரமிப்பை, இன்று என் மகள் எனக்குத் தந்திருக்கிறாள்.  1185/1200 எடுத்து சென்னை மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருக்கிறாள்! டிவிட்டரிலும், மடல் / தொலைபேசி வழியும் வாழ்த்துரைத்த நல்ல உள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.



Friday, January 03, 2014

தேவ்யானி கோப்ரகாடே கதை

தேவ்யானி கோப்ரகாடே கதை - எ.அ.பாலா

இந்திய நியூஸ் மீடியாவும் (பொதுவாக) அரசியல்வாதிகளும் தேவ்யானியின் கைதை ஒரு தேசிய அவமானமாக உருவாக்கி, பொதுமக்களின் நாட்டுப்பற்றை வெளிக்கொணர்ந்து, ரத்தத்தை சூடாக்கி குளிர்காய்ந்த நிலையில், வெகு சிலரே பொதுப்புத்திக்கு எதிராக கருத்துகளை முன் வைத்துள்ளனர். சுவாரசியமான கோப்ரகாடே கதையில், சில புள்ளிகளைத் தொடுவோம். டிவிட்டரில் இது குறித்து ஏற்கனவே கொஞ்சம் பேசியிருக்கிறேன்.

IMF நிறுவனத்தின் தலைவராக இருந்த (பிரதமராக வாய்ப்பிருந்த) பிரென்ச் நாட்டு ஸ்ட்ராஸ் கானை, சாதாரண ஒரு ஓட்டல் சிப்பந்தியின் சாதாரணப் புகாரின் பேரில், விமானத்திலிருந்து இறக்கி, பொது இடத்தில் விலங்கு மாட்டி கூட்டிச் சென்றதும் இதே அமெரிக்காவில் தான் நிகழ்ந்தது. இந்தியாவில் ஒவ்வொரு sexual harassment கேஸிலும், பல நாட்கள்/வாரங்கள் கழித்து, மீடியா கூத்துகளின் முடிவில் தான் சம்பந்தப்பட்ட நபர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படும்! எ.கா: தருண் தேஜ்பால். அமெரிக்காவில், ஒரு இல்லினாயி கவர்னர், ஜெஸ்ஸி ஜாக்ஸன் ஜூனியர், மைக்கல் டக்லஸ் மகன் என்று பல விவிஐபிகள், நம்மூர் லெவலில் ”சின்ன” குற்றங்களுக்காக சிறையில் காலம் தள்ளுகிறார்கள். இது போன்றதை இந்தியாவில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது, ஒன்றிரண்டு exceptions இருக்கும் போதிலும்! தேவ்யானி கைது நடவடிக்கையால், இங்கு சிலபலரின் ரத்தம் கொதிப்பதற்கு இது தான் முக்கியக் காரணம்.

தேவ்யானியின் Diplomatic Immunity பற்றிப் பேசும் இந்திய அரசு, பாலியல் குற்றத்துக்காக, ப்ரென்ச் தூதரக அதிகாரி பாஸ்கலை, நிர்வாணச் சோதனைக்கு உள்ளாக்கி, ஜெயிலில் போட்டது. இத்தாலியத் தூதரை வீட்டுக்காவலில் வைத்து நாட்டை விட்டு நகரக்கூடாது என்று கட்டளையிட்டது! அதாவது, (அந்தந்த நாட்டில்) தீவிரமாக கருதப்படும் குற்றங்களை மனதில் வைத்து Diplomatic Immunity-ஐ பார்க்க வேண்டும். அமெரிக்க நீதிமன்றங்கள், தொழிலாளர் ஊதிய முறைகேடுகள் சார்ந்த குற்றங்களை தீவிரமானதாக பார்க்கின்றன. அடுத்து, சி.ஐ.ஏ ஏஜெண்ட் ரேமாண்ட் டேவிஸ் 2 பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்றதைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவின் இரட்டை வேடத்தை தோலுரித்ததாக சிலர் கூறுவதையும் தமாஷாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானிய சட்டப்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிளட் மனி (Blood money) வழங்கப்பட்டதின் தொடர்ச்சியாகத் தான் டேவிஸ் தண்டனையிலிருந்து தப்ப முடிந்தது.

தேவ்யானி கேஸின், அமெரிக்க பப்ளிக் பிராசிக்யூட்டர் ப்ரீத் பராரா மேல் கொதித்தெழுந்து வசை பாடும் பலர், அதே ஆள் தான், மில்லியன்களைச் சுருட்டிய கள்ளப் பேர்வழிகள் ராஜரத்னத்தையும், ரஜத் குப்தாவையும் உள்ளே தள்ள காரண கர்த்தாவாக இருந்த நேர்மையாளர் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அதே போல, அழுக்கு ஆதர்ஷ் கட்டடத்தில் (தகிடுதத்தம் பண்ணி வாங்கிய) ஒரு ஃப்ளாட் வைத்திருக்கும் தேவ்யானி, தனது பணியாளர் சங்கீதாவை ஏமாற்றி அமெரிக்காவுக்கு வீட்டு வேலைக்கு அழைத்து வந்திருக்க வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்! அதோடு, தேவ்யானி தலித் என்பதால் தான், இந்திய அரசு (இன்னும்) அதி விரைவாக அமெரிக்காவுக்கு எதிராக செயல்படவில்லை என்று மாயாவதி கூறியிருப்பதை வடிவேலு காமடியாக மட்டுமே பார்க்க வேண்டும் :)

சங்கீதாவுக்கான இலவச தங்கும் இடம், விமான கட்டணம் ஆகிய செலவுகளையும் அவரது ஊதியத்தின் ஒரு பகுதியாக பார்க்கவேண்டும் என்று சில புத்திசாலிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பிரச்சினை அது அல்ல. தெரிந்தே சட்டத்துக்கு முறைகேடாக ஒரு தூதரக அதிகாரி நடந்து கொண்டது தான் பிரச்சினை. இதற்கு முன்னும், பணியாளர் ஊதியம் தொடர்பாக 2 இந்திய தூதரக அதிகாரிகள் மீது புகார் எழுந்தும், பிரச்சினை பெரிதாகவில்லை. சங்கீதாவின் குடும்பத்துக்கு விசா, டிக்கெட் வாங்கிக் கொடுத்து, அவர்கள் அமெரிக்கா சென்ற பின் தான், தேவ்யானி கைது நிகழ்ந்தது என்று ஒரு குற்றச்சாட்டு! ஆமாம், திட்டம் போட்டுத் தான் அமெரிக்கர்கள் செய்துள்ளனர். ஏனெனில், இந்திய சட்டத்தையும் வளைக்க முடியும், ஓட்டைகளும் உள்ளன.


முக்கால்வாசி வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்ட முக்கியமான ஒருவரே, சாட்சிக்கு வேண்டி அப்ரூவர் ஆகி விடுவது தொன்று தொட்டு ஒரு வழக்கமாக இங்கு நிலவுகிறது! பணம், பதவி பலத்தினால் சங்கீதாவின் குடும்பம் இங்கே அலைக்கழிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தான் அவர்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. சாட்சி பாதுகாப்பு (Witness protection) என்பதை அமெரிக்கா தீவிரமாக கடைபிடிக்கும் ஒரு நாடு. தேவ்யானியை நிர்வாணச் சோதனைக்கு உட்படுத்தியது 100% உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், இந்தியாவில், யாரை (விஐபிகள் தவிர்த்து!) வேண்டுமானாலும், சந்தேகத்தின் பேரில், போலீஸ் தொட்டுச் சோதனை இடுவதும், கடுமையாகப் பேசுவதும் சாதாரணமாக நடக்கும் விஷயம் தான்! அமெரிக்க ஹிப்பக்ரஸி பற்றி பேசுவதற்கு முன் இந்திய ஹிப்பக்ரஸிகளையும் (இவற்றை அலசினால் விடிந்து விடும்!) நினைத்துப்பார்த்தல் நலம் பயக்கும்! தேவ்யானி கைதுக்கு எதிராக, அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அரண்களை நீக்கியது போன்றவை இந்தியாவுக்கு மரியாதை தரும் விஷயங்கள் அல்ல.

தன் மேல் அமெரிக்க நடவடிக்கையை தடுக்கும் விதமாக (நினைத்துக் கொண்டு!) தேவ்யானி, இந்திய நீதிமன்றத்தில் சங்கீதாவுக்கு எதிராக வழக்கொன்றை பதிவு செய்து வைத்தார். ஆனால், கைதை எதிர்பார்க்கவில்லை! அது தான் உண்மை. தற்போதைய சூழலில், நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்து கொண்டு,தேவ்யானி அமெரிக்காவிலிருந்து வெளியேறுவது தான் பிரச்சினையை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வர உதவும்.

இப்போது தேவ்யானிக்கும் முன்னால் ஷாருக் கானுக்கும் ஆதரவாக கொடி பிடித்த இந்திய அரசு, அதே அளவுக்கு அப்துல் கலாம் விஷயத்தில் நடந்து கொள்ளவில்லை. மேலும், ஒரு இந்திய மீனவர் துபாய் அருகில் அமெரிக்க கடற்படையினரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டபோது இந்தியா இத்தனை ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. இறுதியாக, தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு பல ஆண்டுகளாக செய்யும் கொடுமைகளை இந்திய அரசோ, பிற இந்தியர்களோ வலிமையாக தட்டிக்கேட்டதே கிடையாது என்று தாராளமாகக் கூறலாம்! அமெரிக்கா போல இலங்கை, இந்தியாவின் மிக முக்கியமான ராணுவ / தொழில் கூட்டாளி நாடு இல்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்!

Sunday, November 24, 2013

சச்சினை விட பாரத ரத்னாவுக்கு ஏற்றவர் விஷி ஆனந்த் - ஏன்? எனது Deccan Chronicle கட்டுரை

இது குறித்து நான் டெக்கான் குரோனிகள் நாளிதழில் எழுதியது இதோ.

It's high time Anand awarded the Bharat Ratna - கட்டுரையின் உரல்


Sunday, November 17, 2013

பாரத ரத்னா சச்சின் - விஷி ஆனந்த் சாதனையாளர் இல்லையா?

பாரத ரத்னா சச்சின் - விஷி ஆனந்த் சாதனையாளர் இல்லையா? - இட்லிவடையில் பதிப்பிக்கப்பட்டது
 
சச்சின் ஓய்வு பெற்ற நாளே, 40 வயதிலேயே, அவரது கிரிக்கெட் சாதனைக்காக, இந்திய அரசு அவருக்கு நாட்டின் மிக உயரிய சிவில் விருதான பாரத ரத்னாவை வழங்கி கௌரவித்துள்ளது. இது சரி தான், இல்லை, நாட்டுக்காக அவர் ஆற்றிய தொண்டு என்ன, நாட்டுக்கு நல்வகையில் பங்களிக்காத அந்த கிரிக்கெட் சாதனைக்கு பாரத ரத்னாவா என்று கேட்டு, இது சரியில்லை என்று இரு தரப்பு வாதங்களை பார்க்க முடிகிறது. ஒப்புக்குச் சப்பாணியாக, அவருக்கு மட்டும் விருது கொடுத்தால் பிரச்சினை வரக்கூடும் என்று கருதி, (எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய) CNR ராவ்-க்கும் இப்போது சேர்த்து வழங்கியுள்ளது நல்ல நகைச்சுவை.

நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில், கண்கூடாக பலன் தரும் சிலபல சாதனைகளை செய்தவர்களுக்கு மட்டும் தான் விருது என்றால், ஏற்கனவே (சமீப காலகட்டத்தில்) பாரத ரத்னா வழங்கப்பட்டவர்களில் சிலபலர் தேற மாட்டார்கள் என்பதை கவனிக்க வேண்டும். சச்சின் உட்பட இதுவரை 43 நபர்கள் இவ்விருதை பெற்றுள்ளனர். அப்பட்டியலில், 10 தென்னிந்தியர்கள் (அதிலும் முதல் மூவர் 1954-லிலேயே விருது பெற்றவர்கள் என்பதை நினைவு கொள்க!) மட்டுமே இருப்பதில் பெரிய ஆச்சரியம் ஏதும் இல்லை! ’தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது’ என்ற கூற்று இன்று வரை பொருந்துகிறது!

இது போன்ற ஓரவஞ்சனையை காரணம் காட்டியே, பிரபல பாடகி எஸ்.ஜானகி, சென்ற வருடம் பத்மபூஷன் விருதை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் காரணங்களுக்காகவே எம்ஜியாருக்கும், ராஜிவ் காந்திக்கும் பாரத ரத்னா தரப்பட்டது என்ற பேச்சிலும் நியாயமான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாட்டுக்கு தொண்டு, அதனால் விளைந்த நன்மை ஆகியவை மட்டுமே பாரத ரத்னா விருதுக்கான அளவுகோல்கள் அல்ல. ஒரு மனிதர், ஒரு துறையில் செய்த உயர்ந்த/ஒப்பில்லாத சாதனையை கௌரவப்படுத்தும் விதமாகவும் அது வழங்கப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அத்தகைய நோக்கில், சச்சினுக்கு விருது வழங்கப்பட்டது சரியே என்றாலும், அவரை விட விளையாட்டுத் துறையில் அதிகம் சாதித்த, இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர், இந்தியாவின் ஒரே செஸ் வைரம், இந்தியாவின் (ஏன் ஆசியாவின்) ஒரே உலக செஸ் சேம்பியன் (5 முறை பட்டம், கடந்த 6 ஆண்டுகளாக undisputed Chess champion of the World) விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்காமல், சச்சினுக்கு மட்டும் வழங்கியதற்கு நியாயமான காரணங்கள் எதுவுமில்லை என்பது நிதர்சனம்!

மேலே குறிப்பிட்டதில், World என்று வலியுறுத்தியதில் ஒரு காரணமுள்ளது. உலகில் 8 (ஒப்புக்குச் சப்பாணி நாடுகளை விட்டு விடலாம்) நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட்டில், ஒரு டீம் விளையாட்டில், சச்சின் சாதித்ததைக் காட்டிலும், 120 நாடுகளில் விளையாடப்படும், அன்றிலிருந்து இன்று வரை கடுமையான போட்டி நிலவி வரும், தனிமனித விளையாட்டான செஸ்ஸில் ஆனந்த் சாதித்தது மிக மிக மிக அதிகம் என்பதை அவர் சாதனைகளை உற்று நோக்கினாலே போதும்.

2012-ல் நான் எழுதிய இடுகையிலிருந்து சில விஷயங்களை பகிர்கிறேன்.



”இந்தியாவின் முதல் உலக ஜூனியர் செஸ் சேம்பியன், முதல் கிராண்ட் மாஸ்டர், முதல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர், துரித ஆட்டம், காய்களை பார்க்காமல் ஆட்டம், மொத்தப் புள்ளிகள் என்ற 3 பிரிவுகளிலும் உலகப் பிரசத்தி பெற்ற ஏம்பர் செஸ் டோர்னமண்ட் பட்டத்தை தனியொருவராக வென்ற முதல் செஸ் ஆட்டக்காரர் என்று பல முதல்கள் ஆனந்தின் செஸ் வாழ்க்கையில் விரவி இருக்கின்றன. அதோடு, இந்தியாவின் ஒரே உலக செஸ் சேம்பியன், கோரஸ் டோர்னமண்ட் பட்டத்தை 5 முறை வென்ற ஒரே மனிதர், மைன்ஸ் செஸ் பட்டத்தை 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற ஒரே ஆட்டக்காரர் என்று நாம் பிரமிக்கத்தக்க “ஒரே” ஒருவர் ஆனந்த் மட்டுமே. மிக உயரிய விருதாக கருதப்படும் செஸ் ஆஸ்கார் பட்டத்தை ஆனந்த் 6 முறை வென்றுள்ளார்.

இந்தியாவின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூஷனையும் ஆனந்த் பெற்றிருக்கும் நிலையில், ஒரு விளையாட்டு வீரருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமெனில், அதற்கு ஆனந்த் ஒருவரே மிக்க தகுதி படைத்தவர் என்று தாராளமாக சொல்ல முடியும்.”


மேலும், கடந்த 22 ஆண்டுகளாக ஆனந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகளால் இந்தியாவில் செஸ் விளையாட்டில் பெரும் ஆர்வம் ஏற்பட்டு, ஒரு செஸ் புரட்சியே நடந்துள்ளது. இப்போது இந்தியாவில் 34 கிராண்ட் மாஸ்டர்களும், 70-க்கும் மேற்பட்ட இண்டர்நேஷனல் மாஸ்டர்களும் உள்ளனர். பணம் அதிகம் புழங்காத செஸ் விளையாட்டில், இத்தகைய மறுமலர்ச்சியை, ஆனந்த் தனியொரு மனிதராக நிகழ்த்திக் காட்டியுள்ளார் என்றால் அது மிகையில்லை. இதை நிகழ்த்தியும், 27 ஆண்டுகளாக, இன்று வரை (44 வயது வரை) இந்தியாவின் தலை சிறந்த ஆட்டக்காரராக விளங்கி வருகிறார்! இவற்றுக்கும் மேல், ஆனந்த் எவ்வகையான சாதனை செய்து, பாரத ரத்னாவுக்கு ஏற்புடையவராக ஆக முடியும் என்று புரியவில்லை.

சௌரவ் கங்குலி, ஆனந்த் வெளிநாட்டில் (ஸ்பெயின்) அதிகம் தங்கி இருப்பதால், அவருக்கு பாரத ரத்னா வழங்க ஒரு தயக்கமிருக்கலாம் என்று கூறியிருப்பதை ஏற்க இயலாது. வெளி நாட்டவரான நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கும்போது, வெளிநாட்டில் தங்கியிருக்கும் “இந்திய” ஆனந்துக்கு வழங்குவதில் என்ன தயக்கம்! ஆனந்த் வட இந்தியராக இருந்திருந்தால், அவரது மகா சாதனைகளுக்கு அவருக்கு இந்நேரம் பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதற்கு, கிரிக்கெட் பிரபல விளையாட்டு என்பதனால், என்ற கூற்றை ஓரளவு தான் ஏற்க முடியும். பாரத ரத்னா பீம்சென் ஜோஷி மாமேதை என்பதில் ஐயமே இல்லை. ஆனால், அவரது ஹிந்துஸ்தானி இசையை எத்தனை சாதாரணர்களால் புரிந்து ரசிக்க இயலும். அதனால், பிரபலம் என்பது அளவுகோல் ஆகாது. உண்மை என்னவெனில், ஆனந்த் போல அல்லாமல், சச்சினின் இமேஜ் திறமையாக உருவாக்கப்பட்டு பேணிக் காக்கப்பட்டது. மீடியாவும் அதில் பங்களித்தது.

ஆனந்த், தனது ஒவ்வொரு பெரும் வெற்றிக்குப் பிறகு, மீடியாவில் தோன்றி, அதற்கான அவரது உழைப்பை, சிரமங்களைப் பற்றி பெரிய அளவில் பேசியதில்லை. அதனால், செஸ் விளையாட்டு குறித்து ஓரளவு அறிந்தவர் மட்டுமே, அவரது ஹிமாலய சாதனையின் வீச்சை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், சச்சினுக்கு பல மும்பை (சினிமா, அரசியல், தொழில்துறை) பிரபலங்களின் ஆதரவு சதாசர்வ காலமும் இருந்து வருகிறது. தெற்கில் இருக்கும் பிரபலங்களும், இந்திய செஸ் ஃபெடரேஷனும் இது போன்ற ஒரு status-ஐ ஆனந்துக்கு ஏற்படுத்த தவறி விட்டனர். இதனாலேயே, ’சச்சினுக்கு பாரத ரத்னா’ என்பது கடந்த 2 ஆண்டுகளாக கேட்டது போல ஆனந்துக்கு பாரத ரத்னா என்ற கோரஸ்/கோஷம் எந்த மட்டத்திலும் பெரிதாக கேட்காததற்கு இன்னொரு முக்கியக் காரணம்.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சச்சினை ராஜ்யசபா உறுப்பினராக ஆக்கியுள்ளது. இப்போது, சரியான சூழலில், அவருக்கு பாரத ரத்னா வழங்கி அவரை காங்கிரஸ் அனுதாபியாக மாற்றியிருக்கிறது. மெல்ல மெல்ல, அவரை தேர்தல் பிரச்சாரத்துக்கு ஓரளவுக்கு பயன்படுத்திக் கொள்ள ஒரு யுக்தியாக இது இருக்கலாம். நன்றியுணர்ச்சி சச்சினுக்கு மட்டும் இல்லாமல் இருக்குமா?!? இறுதியாக, சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கக்கூடாது என்பதல்ல வாதம். அவரை விட மகத்தான (விளையாட்டில்) சாதனையாளரான உலக செஸ் சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்காததில் உள்ள நியாயமின்மையும், அரசியல் சார் ஓரவஞ்சனையும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.



இந்த இரண்டு கட்டுரைகளை (ஒன்று ஆனந்த் பற்றி, ஒன்று சச்சின் பற்றி) கட்டாயம் வாசிக்கவும்.

Viswanathan Anand is as precious as Sachin Tendulkar -----
http://www.rediff.com/sports/slide-show/slide-show-1-viswanathan-anand-is-as-precious-as-sachin-tendulkar/20131109.htm#5

Master Blaster or Master Laster: A revisionist look at Sachin Tendulkar’s career -----
http://www.livemint.com/Opinion/PKgPHTk5wKn8DZLRpCtCyK/Master-Blaster-or-Master-Laster-A-revisionist-look-at-Sachi.html

- எ.அ.பாலா

Thursday, November 07, 2013

தீயா வேல செய்யணும், ஆனந்து! விஷி ஆனந்த் vs கார்ல்ஸன் - செஸ் 2013

செஸ் விஸ்வநாதன் ஆனந்துக்கு ‘உலக நாயகன்’ என்பது கமலுக்கு ரவிக்குமார் வழங்கிய பட்டம் போன்றதன்று.  அவர் அங்கீகரிக்கப்பட்ட செஸ் உலக நாயகன், 5 முறை அப்பட்டத்தை வென்றுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும், 2008 மற்றும் 2010-ல் முறையே விளாடிமிர் க்ராம்னிக், டொபோலோவ் ஆகிய 2 ஜாம்பவன்களுக்கு எதிராக ஆடி அவர் வென்றதைப் போன்ற சாதனைகளை இனி ஒரு இந்தியர் அடுத்த 25 ஆண்டுகள் நிகழ்த்தப்போவதில்லை என்று தாராளமாகக் கூற முடியும். தனது 18 வயதிலேயே பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் ஆனந்த் ஒருவரே.

ஆனந்த்-கெல்ஃபாண்ட் 2012 உலக சேம்பியன்ஷிப் போட்டியின் ஆட்டங்கள் அத்தனை சிலாகியமில்லை என்று கூறலாம். ஆனந்த் தனது attacking, aggressive அணுகுமுறையை கைவிட்டு, சற்றே பாதுகாப்பு ஸ்டைலில் விளையாடியதை கார்போவ், கேஸ்பரோவ் உட்பட சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். கேஸ்பரோவ் ஆனந்த் ஒய்வு பெறலாம் என்று கூட கூறினார்.

ஆனந்துக்கு 43 வயது ஆன பின்னும், அவரால் இந்தியாவில் ஒரு செஸ் மறுமலர்ச்சி உண்டான பின்னும், பல கிராண்ட் மாஸ்டர்கள் இந்தியாவில் உருவாகி இருந்தாலும், அவரது செஸ் திறன், மன வலிமை, சேம்பியன் குணம் (இவற்றில் ஓரளவு) கொண்ட ஒரு செஸ் ஆட்டக்காரர் கூட இந்தியாவில் இன்னும் உருவெடுக்கவில்லை என்பது தான் யதார்த்தம். மற்ற விளையாட்டுக்களில், இந்தியாவில், சேம்பியன் தரத்தில் ஒருவருக்கு மேல் இருந்தாலும் (டென்னிஸ்- லியாண்டர், மகேஷ், பாட்மிண்டன் -சாய்னா, சிந்து, கிரிக்கெட்- பலர், தடகளம்- உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ்...), செஸ்-ஐ பொறுத்தவரை,  கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக, ஆனந்த் ஒருவர் தான் உலகத்தரம் கொண்ட ஒரே சேம்பியன் ஆட்டக்காரர்.

ஆனால், மற்ற நாடுகளில், சிலபல குறிப்பிடத்தக்க ஆட்டக்காரர்கள், உலகத் தரத்தில் உருவாகியிருக்கிறார்கள் - லெவான் ஆரோனியன், ஹிகரு நாக்கமுரா, ஃபேபியானோ, செர்கி கராக்கின், மோரோசவிச், மைக்கேல் ஏடம்ஸ், க்ரைசக் அலெக்ஸாண்டர், எடின் பேக்ராட், வேங்க் ஹோ, மமெடயரோவ் போன்றவர்கள்.

சரி, கார்ல்சனுக்கு வருவோம். அவருக்கு 7வது வயதில் தான் செஸ் மேல் ஆர்வம் ஏற்பட்டது. மிக குறுகிய காலத்திலேயே, தனது சற்றே தடாலடி ஆட்டத்தாலும், வித்தியாசமான ஓப்பனிங் அணுகுமுறையாலும் பலரையும் தன் பால் ஈர்த்து விட்டது நிஜம். அதே கார்ல்சன் தனது 12-வது ஏதோ ஒரு செஸ் போட்டியில் சரியாக விளையாடாமல், சுய பச்சாதாபத்தில். “இப்படி செஸ் ஆட்டத்தில் துளித் திறமையின்றி நான் ஏன் பிறந்தேன்?!?” என்று தன்னையே நொந்து கொண்டுள்ளார் :-)

8 வருடங்களுக்குப் பின், அவர் உலகின் நம்பர் 1 ஆட்டக்காரர் (ரேட்டிங் புள்ளிகள் 2872, செஸ் வரலாற்றில் கேஸ்பரோவ் உட்பட யாரும் தொடாத சிகரம் இது) ஆனது மட்டுமன்றி, ஒரு மெகா ஸ்டாராக, விளம்பரங்கள், தோற்றங்கள் வாயிலாக 2013-ல் 3.5 மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதித்தார்.  கேஸ்பரோவைப் போலவே, ஆனால் தனது 22-வது வயதிலேயே, டைம் பத்திரிகையின், உலகில் மிக்க செல்வாக்கு கொண்ட டாப் 100 நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் கார்ல்சன்.

கார்ல்சன் மார்ச் 2013-ல் நடந்த, உலகின் டாப் 8 ஆட்டக்காரர்கள் பங்கு பெற்ற, 14 சுற்றுகள் கொண்ட மிகக் கடினமான Candiates tournament-ல் முதலிடம் பெற்று, ஆனந்துக்கு போட்டியாளராக (challenger) அறிவிக்கப்பட்டார்.  யார் ஆனந்துக்கு போட்டியாளராக வருவார் என்பதை கடைசி சுற்று வரை சொல்ல முடியாத அளவுக்கு, த்ரில்லிங்காகவும், பல அருமையான ஆட்டங்கள் கொண்டதாகவும் இந்த Candiates tournament இருந்தது.  இறுதி 3 சுற்றுகளில் 2 தோல்விகளை கார்ல்சன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் இதை கவனத்தில் கொள்வது மிக அவசியம் :-)

போட்டி முடிவில் அவரும் கிராம்னிக்கும் சம புள்ளிகளில் (8.5/14) இருந்தும், அதிக வெற்றிகள் பெற்றவர் என்ற கணக்கில், கார்ல்சன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்!  ஆனந்தே, இதை Best ever Candidates tournament in history என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Candidates tournament ஆட்டங்களை இங்கே ஆடிப்பார்க்கலாம்!
http://www.chessgames.com/perl/chess.pl?tid=80233

இவற்றில் மிகச் சிறந்ததாக நான் கருதுவது இவை:
http://www.chessgames.com/perl/chessgame?gid=1712941 - Aronian vs Gelfand
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713231 - Svidler vs Carlsen
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713866 - Aronian vs Kramnik
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713636 - Carlsen vs Ivanchuck
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713488 - Gelfand vs Aronian
http://www.chessgames.com/perl/chessgame?gid=1714070 - Carlsen vs Svidler
http://www.chessgames.com/perl/chessgame?gid=1714073 - Ivanchuck vs Kramnik

கார்ல்சனின் செஸ் வலிமைகள், அவரது பயமின்மை, டிராவுக்கு (draw)  ஆடாமல் கடைசி வரை போராடும் குணம், வித்தியாசமான தொடக்க ஆட்ட அணுகுமுறைகள், தன்னம்பிக்கையும், உடல் திடமும் தரும் மனவலிமை ஆகியவை. சமீபத்தில் நடந்த Sinquefield Cup போட்டி ஆட்டத்தில், கஷ்டமானதொரு பொசிஷனிலிருந்து திறமையாக தப்பித்து, ஆட்டத்தை சமநிலைக்கு எடுத்து வந்து, லெவன் ஏரோனியன் டிரா கேட்டும் தர மறுத்து, மெல்ல மெல்ல தனது பொசிஷனை பலப்படுத்திக் கொண்டு, 70 நகர்த்தல்களுக்குப் பின் கார்ல்சன் ஆட்டத்தை வென்றார். ஒரு மலைப்பாம்பு தனது இரையை சுற்றிக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கிச் சாகடிக்கும் விதத்துக்கு நிகரானது இது!

”Carlsen is also one of the most talented players from any generation. He will be ridiculously difficult to play against” என்று ஒப்புக் கொள்ளும் ஆனந்த், தான் under dog ஆக குறிப்பிடப்படுவது பற்றி அதிகமாக சிந்திப்பதில்லை என்றும், தனது உழைப்பு, ஆற்றல், அனுபவம் இவற்றைக் கொண்டு போட்டியை நல்ல முறையில் எதிர்கொள்வதில் மட்டுமே தனது கவனம் முழுதும் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனந்தின் மேல் தற்போது லேசான கடுப்பில் இருக்கும் கேஸ்பரோவ், கார்ல்சனுக்கு ஆலோசகராக இருப்பது, கார்ல்சனுக்கு பலன் தரும் விஷயமே! கார்ல்சனுக்குத் தான் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகக் கூறும் கேஸ்பரோவ், ஆனந்தை வெற்றி கொள்வது அவ்வளவு சுலபமில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

இறுதியாக, ஆனந்த் 2008, 2010-ல் விளையாடியது போல தொடக்க ஆட்டத்தில் சிறப்பாக ஆடி, நடு ஆட்டத்தில் (middle game) நுழையும்போது, சற்றே சாதகமான பொஸிஷனுடன் இருக்க வேண்டியது அவசியம். அது போல, வெள்ளைக் காய்களோடு விளையாடும்போது, aggression, சில சமயங்களில் novelty, அவசியம்.  மெத்தனமாக (passive)  ஆடினால், கார்ல்சன் கை ஓங்கி விடும் அபாயம் உள்ளது.  இந்த செஸ் உலகப்போட்டி, ஃபிஷர் vs ஸ்பாஸ்க்கி, காஸ்பரோவ் vs கார்போவ் உலகப் போட்டிகளுக்கு நிகரான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

நேரம் கிடைக்கும்போது, போட்டியின் interesting ஆட்டங்கள் குறித்து எழுதலாம் என்ற உத்தேசம் இருக்கிறது.  பார்க்கலாம்!

எ.அ.பாலா

Friday, November 01, 2013

பெருமாள் பெயரில் ஒரு நூதனத் தீண்டாமை!



’பெருமாளுக்குத் தீட்டு’ புகழ் தேவநாத சுவாமி கோயிலில் (கடலூர் மாவட்டம், திருவந்திபுரம்), இன்னொரு மகாஅவலம் பல ஆண்டுகளாக நடந்தேறி வந்திருந்தாலும், இப்போது தான் அது கலெக்டர் (மனு வடிவில்) வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்! இக்கோவிலுக்கு அருகில், ”குரு பரம்பரை”யின் கடை ஆசார்யரான மணவாள மாமுனிகளுக்கு கோயில் ஒன்றுள்ளது.   பல ஆண்டுகளாக, ஐப்பசி மாதம் நடைபெறும் மாமுனிகளின் உத்சவ சமயம், அவரது விக்ரகத்தை வீதி ஊர்வலமாக எடுத்து வரும் வழக்கம் உள்ளது.  மாமுனிகளின் விக்ரகம் தேவநாத சுவாமி கோயில் முன் வருகையில், கோயில் கதவு மூடப்பட்டு விடும்.  அதாவது பெருமாள் மணவாள மாமுனிகளை பார்த்தால், பெருமாளுக்குத் தீட்டும் தோஷமும் ஏற்பட்டு விடுமோ என்னவோ?!?!

வைணவ திவ்யதேசமான தேவநாத சுவாமி ஆலயம் வடகலை சம்பிரதாயக் கோயில், மணவாள மாமுனிகள் தென்னாச்சார்ய வழி ’குரு பரம்பரை’யின் கடைசி குரு.  உடையவர் இராமானுஜரின் அவதாரமாகவும் (ஏராரும் எதிராசன் என உதித்தான்) அரங்கநாதர்க்கே குருவாகவும் கருதப்படுபவர்.  அதாவது, பெருமாளில் தொடங்கி, மாமுனிகளில் முடியும் குரு பரம்பரையானது ’ஆச்சார்ய ரத்தின மாலை போன்றது.  மாமுனிகள் வைணவம் சார்ந்த பல சிறந்த கிரந்தங்களை இயற்றியுள்ளார்.

கோயில் கதவுகளை மூடி,   வைணவம் தழைக்க வந்த ஒரு பெருந்தகையை இப்படி அவமானப்படுத்துவது கூட ஒரு வகையான தீண்டாமையே என்றும், மணவாள மாமுனிகள் ஊர்வலம் செல்கையில் பெருமாள் கோயில் கதவுகளை மூடக்கூடாது என்றும் ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரட்சண சபையின் தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசரும், இன்னும் சிலபல பக்தர்களும் கலெக்டரிடம் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர், இந்த ஆண்டு கோயில் கதவுகள் மூடப்பட்டால், நீதிமன்றத்துக்கு செல்லப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

அப்படியும், இந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதியன்று கலை 9 மணி அளவில், மணவாளமாமுனிகள் விக்ரகம், ஊர்வலமாக தேவநாத சுவாமி கோயிலைக் கடக்கையில், கோயில் கதவுகள் மூடப்பட்டன.  இரு தரப்பினருக்கும் இடையே பலத்த வாக்குவாதமும் நிகழ்ந்து போலீஸ் வந்து அமைதிபடுத்த வேண்டியிருந்தது. கோவிலுக்கு வந்த பொது மக்கள் அதிர்ந்து போய் இதை கவனித்துக் கொண்டிருந்தனர்.  கோயில் பணியாளர்கள் இருவர், இந்த அவலக் கூத்தை புகைப்படம் எடுத்த பத்திரிகை சார்ந்த புகைப்படக்காரர்களை மிரட்டி, அவ்விடத்தை விட்டு துரத்த முயன்றுள்ளனர். 

இவை எல்லாவற்றுக்கும் உச்சம், கோயில் தலைமை அதிகாரி, “மணவாள மாமுனிகள் ஊர்வலத்தின்போது கோயில் கதவுகளை மூடுவது என்பது தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு சம்பிரதாயம் (கடவுளே, கடவுளே, கடவுளே!!!!!) இந்த சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் அனாவசியமாக இதை ஒரு பிரச்சினை ஆக்கியிருக்கிறார்” என்று சொல்லியிருப்பது தான்!

இவர் போன்ற ஆட்களையும், அண்ணல் இராமானுஜர் போதித்த வைணவத்துக்கு உரித்த விரிந்த நோக்கமும், அடக்கமும், புரிதலும், அடியார்க்கு அடியராய் இருக்கும் பண்பும் அறவே இல்லாத இந்த கோயில் அர்ச்சகர்களையும்அந்த தேவநாதப் பெருமாள் கூட திருத்த முடியாது!!!

வடகலையாருக்கு மணவாள மாமுனிகள் ஆகாமல் போனதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. அது சற்றே நீண்ட சமாச்சாரம் என்பதால், விவரமாக அடுத்த இடுகையில் சொல்கிறேன்.  பொறுத்திருக்கவும்.

எ.அ.பாலா

பிற்சேர்க்கை: இதை வடகலை vs தென்கலை சண்டை சச்சரவாக மட்டும் எடுத்துக் கொள்ள இயலாது.  ஏனெனில், பார்ப்பனர் அல்லாத வைணவர் பலரும், இராமானுஜரைப் போலவே, மணவாள மாமுனிகளையும் வழிபாட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய, வைணவம் தழைக்க அவதரித்த, ஒரு மகானாகவே கருதி, பல வைணவ திவ்ய தேசங்களில் நடைபெறும் மாமுனிகளின் திருநட்சத்திர வைபவத்தில் கலந்து கொள்கின்றனர்.

Thursday, October 17, 2013

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் சச்சின் டெண்டுல்கர் ?!?!



ஓய்வு என்ற முடிவெடுத்த பின், 2 டெஸ்ட் போட்டிகள் எதற்கு என்ற எண்ணம் என் மனதிலும் எழுந்தது. 200 டெஸ்ட்கள் என்ற இலக்குக்கு வேண்டி சச்சின் ஆடுகிறார் என்பது தெளிவு! இது, சச்சின் ரெகார்டுகளுக்கு ஆடுபவர் என்று கூறுபவர்களின் வாதத்திற்கு வலிமை சேர்ப்பதாகவே உள்ளது.  உலகின் தலை சிறந்த மட்டையாளரான பிராட்மேன் 99.94 என்று அவரது டெஸ்ட் சராசரி இருந்த நிலையில், ஓய்வு பெறவில்லையா ? சச்சின் ஏன் இதை யோசிக்கவில்லை?

இது ஒரு புறமிருக்க, ஒரு 2 ஆண்டுகள் முன்னமே அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று சிலபலர் கூறுவதிலும் அர்த்தம் இருப்பதாகவே தோன்றுகிறது.  சச்சின் தனது கடைசி 25 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில், ஒரு சதம் கூட அடிக்கவில்லை, 4 ஐம்பதுகள், சராசரி 30.04, அதாவது அவரது மொத்த சராசரியை (53.86) விட 24 ரன்கள் குறைவு! இதை, மும்பையைச் சேர்ந்த மற்றொரு ஜாம்பவானின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இன்னும் தெளிவு கிடைக்கும்.  கவாஸ்கர், தனது கடைசி இன்னிங்க்ஸில், பந்து நர்த்தனமாடிய ஒரு square turning பங்களூர் ஆடுகளத்தில், பாகிஸ்தானின் மிகச் சிறந்த 3 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகத் திறமையாக விளையாடி 96 ரன்கள் எடுத்தார். இந்தியா தோற்றது என்பது வேறு விஷயம்!  கடைசி 25 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில், கவாஸ்கர் எடுத்தது, 4 சதங்களும், 6 ஐம்பதுகளும், சராசரி 58 ரன்கள் !!!

கிரிக்கெட் மேதையான சச்சின், ஏன் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக, தன்னை இவ்வாறு வதைத்துக் கொள்ள வேண்டும் !?  அவர் லெவலுக்கு, வயதுக்கு எதிரான அந்த ஜீவமரண போராட்டம் பார்க்க சகிக்காமல் இருந்தது. கிரிக்கெட்டின் மேல் கொண்ட காதல் தான் காரணம் என்று நினைக்கிறேன்.  தனது ஃபார்ம் திரும்பி விடும் என்ற அவரது எதிர்பார்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்! ஆனால், இளமை திரும்புவதில்லை என்பதை சற்று மறந்து விட்டார்.  28 வயதில் சுலபமாக கை கூடியவைகளை 38-ல் கை கூட வைக்க சச்சினால் கூட இயலாது என்பது தான் யதார்த்தம்.  Sachin should have gone in a blaze of glory for the ultimate cricket genius  he is, but sadly that did not happen.  அவரது கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தாலும், கடைசி 2 ஆண்டுகளில், சாமானிய பந்து வீச்சாளர்களிடமெல்லாம் போராடிய சச்சினின் இமேஜ் மனத்திரையில் விலக மறுக்கிறது. 

சமகாலத்தில் விளையாடிய (சச்சினுக்கு நிகரானவர் என்று சொல்லத்தக்க!) லாராவின் (கடைசி 25 இன்னிங்க்ஸ்கள்) புள்ளி விவரங்கள் பிரமிக்க வைப்பதாக உள்ளது. அவரது சராசரி 45 ரன்கள் என்பதை விட, தனது கடைசி வருடத்தில் லாரா, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா என்ற பலமான அணிகளுக்குக் எதிராக, 2 சதங்களும், 2 இரட்டைச்சதங்களும் எடுத்தார்.  அதாவது, ஓய்வு பெறும் வரையில், லாராவின் ஒளிக்கீற்று பிரகாசமாகவே எரிந்தது! சச்சின் போன்ற ஒரு மேதை, கலைஞர் என்ற நிலையிலிருந்து கணக்காளராக மாறி விட்டது, அவரது பரம் விசிறிகளுக்கு சற்று வருத்தமான விஷயமே. விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டைலில் ஆரம்பித்தவர், இப்படி பாய்காட் போல சர்வைவலுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டது அதை விட வருத்தமான விஷயமே!

கபில்தேவும் ஹாட்லியின் பந்து வீச்சு ரெகார்ட்டை முறியடிக்க, பரிதாபமாக மூச்சிரைக்க பந்து வீசிய அந்த கடைசி டெஸ்ட்கள் ஞாபகத்திற்கு வருகிறது. முரளிதரன் அந்த ரெகார்டை கபளீகரம் பண்ணி விட்டு, இலக்கை எங்கோ எடுத்துச் சென்று விட்டார் என்பது வேறு விஷயம்!  இப்போது, சச்சின் தனது விருப்பப்படி (இந்திய மண்ணில்) ஓய்வு பெறுவதற்காக, தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சுருக்கப்பட்டு விட்டது. இதற்கு முன்னால், யாருக்காகவும் இப்படி நடந்ததாக ஞாபகமில்லை! வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடரை விட (வலிமையான அணிக்கு எதிரான) தென்னாப்பிரிக்கத் தொடர் மிக மிக முக்கியமானது.  சச்சின் ஓய்வு பெற்றிருந்தால், இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரே நடைபெற்று இருக்காது என்பது தான் யதார்த்தம்.  மும்பையில் தான் ஓய்வு என்று சிறுபிள்ளை போல ஏன் இந்த பிடிவாதம் என்றும் புரியவில்லை!?

- எ.அ.பாலா

பிகு: 24 வருடங்களாக, நான் சச்சினின் பரம விசிறி. அவரது 90% ஆட்டங்களை நேரில் அல்லது டிவியில் ரசித்து வந்திருக்கிறேன்.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails